Wednesday, August 01, 2007

இன்றைய இரு கோடுகள்

இரு கோடுகள்

அழிக்காமல் ஒரு  கோட்டை, எப்படி சின்னக் கோடாக்குவது? பக்கத்தில் ஒரு பெரிய கோட்டை வரைந்தால் அந்தப் பழைய கோடு சின்னக் கோடாகிவிடும். இது எல்லோருக்கும் மனப்பாடமான ஒரு புதிர்.

எப்படி ஒரு கோட்டை பெரியதாக்குவது? பக்கத்திலே ஒரு சின்னக் கோட்டை வரைந்தாலே போதும். இது எதிர்மறை வாதம்.

இன்றைய நடப்பிலே அரசியலில் நடப்பதும் அதுதான்.தினந்தோரும் ஒரு கீழ் நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இன்றைய அரசியல் பேச்சுக்களும் செயல்பாடுகளும். நேற்று அவர் பேசியதே நன்றாக இருந்தது என்று நாம் தினந்தோரும் நினைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம்.

எடுத்துக்காட்டாக சில பேச்சுக்கள், அறிக்கைகள்:
  • கலைஞரும், அம்மையாரும் விட்டுக்கொண்டிருக்கும் அறிக்கைகளை விட இதற்கு வேறு ஒரு முதன்மையான எடுத்துக்காட்டு இருக்க முடியாது. தினமும் காலையில் எழுந்தவுடன், பல் தேய்ப்பதற்கு முன் இன்று எப்படி எதிர் அறிக்கை விடலாம் என்றே இவர்கள் சிந்திப்பார்கள் போல் இருக்கிறது. நேற்றைய அறிக்கை சற்று பண்போடு இருந்தது என்று நினைக்கும் வகையில் இன்றைய  அறிக்கை இருக்கிறது. நாளை வரப்போகும் அறிக்கை, இன்றைய அறிக்கையை மேலான அறிக்கையாய் செய்து விடும்.
  • "எது எதற்கோ என்னை வந்து பார்த்து காரியம் சாதித்துக் கொள்பவர் என்னை இதற்கும் வந்து பார்த்திருக்கலாம்" தா. பாண்டியனைப் பற்றி கலைஞர்.
  • "இன்று 'கொஞசம்' அதிகம் ஆகிவிட்டது போலிருக்கிறது" ஜெ வைப் பற்றி.
  • "நமது நாட்டு வாக்காளர் நாலு காசு பார்க்கும் நேரம் நல்ல தேர்தல் தினம்தானே? நாட்டுத் தலைவர் தேர்தலிலே நான் நாலாறு கோடி திரட்டியதும் அந்த விதம்தானே?" ஜனாதிபதி தேர்தல் சமயம் ஜெ வைப் பற்றி.
  • வாடா, போடா என்று நிருபரிடம்.
  • "குடித்துவிட்டு சட்டசபைக்கு வருகிறார்கள்" ஜெ, விஜயகாந்தைப் பற்றி.
  • தினமும் கருணாநிதியை திட்டித் திட்டி ஜெ விடும் அறிக்கை.
  • ராஜசேகர ரெட்டி, சந்திரபாபு நாயுடுவைப் பார்த்து நாக்கூசும் அளவுக்கு சட்ட சபையில் பேசிய பேச்சு
  • செங்கொடிகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். நந்திகிராமத்தில் துப்பாக்கி சூடு நடந்தால் அது ஒன்றுமேயில்லை. கம்மத்தில் துப்பாக்கி சூடு நடந்தால் அரசு பதவி விலக வேண்டும். மானங்கெட்டத் தனமான பொழப்பு.
  • கர்நாடகா குமாரசாமி அதற்கு மேலே. ஹனிஃப் வீட்டிற்கே போய் ஏதோ ஒரு தியாகியைப் பார்ப்பது போல பார்க்கிறார். அவருக்கு அரசாங்க ஆஸ்பத்திரியிலே வேலைக்கு உத்தரவாதம் அளிக்கிறார், ஏதோ ஹனிஃப் சோத்துக்கே சிரமப்படுவது போலவும், அவர் குடும்பத்துக்கு உதவி செய்வதுதான் நாட்டில் முதல் பிரச்சினை போலவும்.
  • பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி இன்னும் ஒரு படி மேலே போய், சஞ்சய் தத்தை விடுதலை செய்வதுதான் முறையானது என்றும் அவர் குற்றமற்றவர் என்றும் அறிக்கை விடுகிறார், ஒரு நீதி மன்றத்தால் தெள்ளத் தெளிவாக காரிய காரணமெல்லாம் காட்டி குற்றம் சாட்டப்பட்டவரை, எப்படி ஒரு மத்திய மந்திரி பதவியில இருப்பவர் இப்படி ஆதரிக்க முடிகிறது? அரசியலில் எந்த நிலைக்கும் தாழ்ந்து போகலாம் என்று காட்ட இவர் உதாரணம்.
இவை அனைத்தும் அரசியலில் விமரிசனத்தை தாங்கிக் கொள்ள முடியாத நிலைக்கு தலைவர்கள் வந்து விட்டதையும், தரம், கண்ணியம், கட்டுப்பாடு போன்றவை காற்றிலே பறக்க விடப்பட்டதையும்தான் காட்டுகின்றன.



Need a vacation? Get great deals to amazing places on Yahoo! Travel.

No comments: