Tuesday, May 27, 2008

பிணம் தின்னும் கழுகுகள்

பிணம் தின்னும் கழுகுகள்
தில்லி, நொய்டா சிறுமி கொலை வழக்கில், ஊடகங்களின், குறிப்பாக தொலைக்காட்சிகளின் போக்கு மிகவும் அநாகரிகமானது. எள்ளளவு கூட மனதாபிமானம் இல்லாமல், அச்செய்தியை கூறு போட்டு, கூப்பாடு கூவி விற்று, தங்களின் ‘Air time’ நிரப்பிக் கொண்டதுமில்லாமல், ‘TRP rating’கை உயர்த்தவும் உபயோகப்படுத்திக் கொண்டது. தொலைக்காட்சிகள், வேட்டை நாய் போல் தேடித் தேடி, துருவித் துருவி, தெருவில் போவோர் வருவோர் அனைவரையும் பேட்டி கண்டு, , காவல் துறையினரை ஒரு முனைப்போடு செயல் பட முடியாமல் வைத்து விட்டன.

காவல் துறை வழக்கில் கவனம் செலுத்தாமல், பேட்டி கொடுப்பதிலும், அறிக்கை விடுவதிலும்தான் அதிக கவனம் செலுத்தியுள்ளார்கள். வழக்கு ஆரம்பித்த இரண்டாவது நாளிலேயே காவல் துறை அதிகாரி மாற்றப்படுகிறார். இத்தனைக்கும் அவர் செய்தது என்ன? ஃபாரன்ஸிக் அறிக்கை வந்த பிறகுதான் திட்ட வட்டமாக எதுவும் கூற முடியும். அதற்கு ஓரிறு வாரங்கள் ஆகலாம் என்றார். அதில் ஒன்றும் தவறில்லையே? முறையாக ஒரு வழக்கை நடத்தினால்தான் அதில் தவறின்றி முடிவெடுக்க முடியும். இவ்வளவு உணர்ச்சி பூர்வமான ஒரு வழக்கை எடுத்தோம், கவிழ்த்தோம் என்று நடத்த முடியுமா?

அவருக்குப் பின் பொறுப்பேற்ற காவல் துறை அதிகாரி என்ன பேட்டி கொடுக்கிறார்? அந்த சிறுமியும், வீட்டில் உதவியாளாராக இருந்தவரும் இருந்த நிலை கண்டிக்கத் தக்கதாக (‘objectionable’) இருந்ததாகவும், ஆனால் அதே சமயம், அவர்கள் தன்னிலை (compromising) தவறி இல்லை என்றும் பேட்டி கொடுக்கிறார். இவர் என்ன திரைக்கதை வசனகர்த்தாவா, கதை எழுத? இந்த வார்த்தைகளின் விளைவுகள் தெரியாமல் பிரயோகப்படுத்தலாமா? அதுவும் SSP போன்ற உயர் பதவியில் இருப்பவர்கள்? இவர்கள் பேட்டி கொடுக்கும் நேரத்தை வழக்கில் செலுத்தியிருந்தால், சிறுமியின் மரணத்திற்கான காரண, காரியங்களைக் கண்டு பிடித்திருக்கலாம்.

ஊடகங்கள் இச்சம்பவத்தை ஒரு “கௌரவக் கொலை (Honor killing)” என ஒரு புது அடைமொழி கொடுத்து வர்ணிக்கின்றன. ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானில் ஒன்று அறியாத பலரை தவறுதலாகக் கொன்றதற்கு, அமெரிக்கர்கள் கூறிய “collataeral damage” என்கிற வர்ணணை போல, சிறிதும் ஈவு இரக்கமின்றி எப்படி இவர்களால் இப்படிக் கூறமுடிகின்றது. இவர்களுக்கு, குடும்பம், குழந்தைகள் இல்லையா? வேறு கிரகத்திலிருந்து வந்தவர்களா?
காவல்துறையினர் கூறும் ஒரு முக்கிய தடையம் என்ன தெரியுமா? ஹரித்துவாரில், ஈமக் கிரியை நடத்தும் இடத்தில், சிறுமியின் அப்பா, மரணம் இரவு 2 மணிக்கு நடந்ததாக பதிவு செய்துள்ளாராம். ஆனால் விசாரணையின் போது காலை 6 மணிக்குத்தான் தனக்கு மரணம் பற்றி தெரியும் என்றாராம். சம்பவம் நடந்த நேரமும், தெரிந்த நேரமும் வித்தியாசமாக இருக்கலாமே? இதில் என்ன தடையம் கிடைத்திருக்கக்கூடும். இந்த விதமான கோமாளித்தனமான விதத்தில் தான் விசாரணை செல்கிறது.

போதாதற்கு, உடன் பணி புரியும் பெண் மருத்துவருடன் தகாத உறவு என்று ஒரு குற்றச் சாட்டு. இனி அலுவலகத்தில் பணி புரியும் அனைவரும் கூடுமான வரை எதிர் பாலர் இல்லாத அலுவலகத்தில் தான் பணி செய்ய வேண்டும். நம் போதாத காலம், ஏதேனும் சம்பவம் நடந்து விட்டால், இது மாதிரிதான் நம் மானமும் பறிபோகும். தமிழகக் காவல்துறை கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் இருந்து கஞ்சா எடுப்பதைப்போல, இந்த தகாத உறவு, வடக்கத்திய பாணி போலும்.

இதில் முக்கியமாக இந்த சிறுமியின் மானத்தை விலை போட்ட இந்த தொலைக்காட்சிகளும், காவல் துறையும், துச்சாதனனை விடக் கொடியவர்கள். ஊடகங்கள், பிணம் கேட்பாரற்றுக் கிடந்தால் எப்படி கழுகுகளும், வல்லூறுகளும் அதை கொத்திக் கிளறி பிண்டத்தை வாறி இறைக்குமோ, அப்படி பால் வடியும் முகம் கொண்ட சிறுமியை, பச்சிளம் மாறாத ஒரு குழந்தையை சின்னா பின்னப் படுத்தி விட்டார்கள். இதில் என்ன கொடுமை என்றால் இவர்கள் அனைவரும், தத்தம் தொழிலில், நன்கு படித்து, அனுபவம் பெற்றவர்கள். செய்தியை மக்களுக்கு எப்படி அளிக்க வேண்டும் என்று அறிந்தவர்கள். ஒரு துர்மரணச் செய்தியை எப்படி வியாபாரமாக மாற்றினார்கள் என்றுதான் தெரியவில்லை.

இதில் என்ன ஒரு அலங்கோலம் என்றால், 25ம் தேதி ஊடகங்களின் முக்கிய செய்தி கர்நாடக தேர்தல் நிலவரம் ஆகும். கல்யாணப் பந்தி முடிந்து எச்சில் இலைகள் குப்பைத்தொட்டியில் விழும் போது எப்படி தெரு நாய்கள், பக்கத்து தொட்டியிலிருந்து அடித்து, பிடித்து இன்னொரு குப்பைத் தொட்டிக்குத் தாவுமோ அப்படித் தாவி தேர்தல் செய்திகளுக்கு முதலிடம் கொடுத்தனர். கேட்டால் இதுதான் இதழியல் (journalism) என்பார்கள், வெட்கம் கெட்டவர்கள்.

இந்நிகழ்வுகளில், பாரட்டப்பட வேண்டியவர்கள் மத்திய மந்திரி திருமதி ரேணுகா சவுத்திரியும் மற்றும் சில அரசு சாரா அமைப்புகளும்தான். ஒரு சிறுமியை தவறாக சித்தரித்து களங்கப்படுத்தியதற்காகவும், அவர் பெயரைக் கூறி அடையாளத்தை வெளிப்படுத்தியதற்காகவும் juvenile சட்டங்களின் படி காவல் துறையினர்மீது நடவடிக்கை எடுக்கப் போவதாகக் கூறியுள்ளனர். அவர்கள் தொலக்காட்சிகளின் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Monday, May 05, 2008

பாவேந்தர் காட்டும் இயற்கை எழில்

சென்ற வெள்ளிக்கிழமை (மே மாதம் 2 ம் தேதி) பாவேந்தர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பற்றிய ஒரு கருத்தரங்கம் ரியாத், சௌதி அரேபியாவில் நடை பெற்றது. அதில் நான் வாசித்தளித்த கட்டுரை.
........

பாவேந்தர் காட்டும் இயற்கை எழில்
(கோ. பாலமுகுந்தன்)

மேதகு இந்தியத் தூதர் அவர்களுக்கும், எழுத்துக்கூடத்தின் உறுப்பினர்களுக்கும், மற்றும் ஏனைய பெரியோர்களுக்கும் என் இனிய மாலை வணக்கங்கள்.

பாவேந்தரின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், எனக்கும் ஒரு பங்களித்து, சந்தர்ப்பம் தந்துதவிய ஒருங்கிணைப்பாளர்களுக்கு என் நன்றி.

ஓர் இரவு திரைப்படத்தில் வரும் இந்த பாடலை ஒலி பரப்பி என் உரையை வாசிக்கிறேன்.

“துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ அல்லல் நீக்க மாட்டாயா
வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே எம் வாழ்வில் உணர்வு சேர்க்க
நீ அன்றை நற்றமிழ்க் கூத்தில் முறையினால் ஆடிக் காட்ட மாட்டாயா
அறமிதென்றும் மறமிதென்றும் யாம் அறிகிலாதபோது
தமிழ் இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல் இயம்பிக் காட்ட மாட்டாயா..”

இதயத்தின் வலிக்கு இசையை அழைத்தவன். வன்முறையை நீக்கி, ஏழ்மையைக் களைவதற்கு தமிழை துணைக்கு அழைத்தவன். கல்வி புகட்ட வள்ளுவனை ஆசானாய் ஏற்றவன். தமிழே மூச்சாய், தாரக மந்திரமாய், தரணியெங்கும் தழைத்தோங்க சங்க நாதமிட்டவன்.

பாவேந்தர் பற்றி பேசும் போது இயற்கையுடன் அவர் கொண்டிருந்த பிணைப்பை மறக்க முடியுமா? புரட்சிக் கவிஞரின் மறு பக்கம் என்று சொல்லக் கூடிய வகையிலே அவர் இயற்கையை வர்ணித்து எழுதிய ‘அழகின் சிரிப்பு’ ஒரு தெவிட்டாத தேன். மங்காத ஒளி. வர்ணனைகள் காட்சிகளை கண் முன் கொண்டு நிறுத்தும். கை கோர்த்து நடத்திச் செல்லும்.

அவற்றிலிருந்து சில வர்ணணைகளை, காட்சிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.

கடற்கரையை, தினம் வந்து போகும் காதலர்கள் பதித்த கால் தடங்களால் வரையப்பட்ட ஒரு பெரிய புள்ளிக் கோலம் என்று வர்ணிக்கும் கவிஞர்கள் மத்தியில், அதை ஒரு மணல் மெத்தையென்றும், அங்கே மேவும் நீர் அலைகளை, கல்விக் கூடத்தில் பாடம் பயிலும் இளைஞர்களின் எழுச்சி மிகு பூரிப்பிற்கு ஒப்பிடுவதும் இவர் போன்ற புரட்சியாளர்களால் மட்டும்தான் முடியும்.
…..
கடல் ஆர்ப்பரித்த முழக்கத்தை இசையாய் வரித்த வாணர் இவர்.
“கடல் நீரும் நீல வானும் கை கோக்கும்!
அதற்கிதற்கும் இடையிலே கிடக்கும் வெள்ளம் எழில் வீணை;
அவ்வீணை மேல் அடிக்கின்ற காற்றோ வீணை நரம்பினை அசைத்து இன்பத்தை
வடிக்கின்ற புலவன்!
தம்பி, வண்கடற் பண் பாடல் கேள்”
அதனால் தான் “துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா..” என்று ஏங்கினானோ?
….
‘அழகு’ என்றாலே கவிஞர்களுக்கு எப்போதும் ஒரு பரவசம்தான். அழகைக் கண்டால் ‘ஆடாத மனமும் உண்டோ?’ அழகை ஒரு பெண்ணாகவே பாவிக்கும் கவிஞர்கள் தான் இந்தப் புவியில் உண்டு. சுப்பு ரத்தினம் இதற்கு விதி விலக்கா? ஆனால் என்ன, மற்றவர்கள் மங்கையை (அழகை) நிலவில், இரவில் அதன் ஒளியில் கண்டனர். இவர் கதிரவனின் இளம் காலைக் கதிரில் கண்டார். கலப்பையுடன் உழவன் செல்லும் புது நடையில் கண்டார்.

தென்றலை திகட்டாமல் வர்ணிக்கும் வள்ளல் இவர். “தென்றல் வந்து என்னைத் தொடும். சத்தமின்றி முத்தம் இடும்” என்றார் ஒரு கவிஞர். இவரும் அவ்வாறே தென்றலின் குறும்பை வர்ணிக்கிறார். “பெண்கள் விலக்காத உடையை நீ போய் விலக்கினும், விலக்கார் உன்னை” என்று. குழந்தையின் நெற்றியில் விழும் சிறு குழலை அசைந்தாட்டி, மழலையை சிலிர்க்க வைக்கும் தென்றலைப் போற்றுகிறார்.
“கழுகொடு, நெடிய தென்னை, கமழ்கின்ற சந்தனங்கள்,
சமைகின்ற பொதிகை அன்னை, உனைத்தந்தாள், தமிழைத் தந்தாள்,
தமிழ் எனக்கு அகத்தும், தக்கத் தென்றல் நீ புறத்தும், இன்பம்
அமைவுறச் செய்வதை நான் கனவிலும் மறவேண் அன்றோ?” என்று தென்றலுக்கு தலை வணங்கி நன்றி சொல்கின்றார்.
….
குமுத மலரை பெரும்பாலான கவிகள், காதலியின் இதழ்களுக்கும், கண்ணிற்கும் ஒப்பிடுகையில், “கரிய பாம்பின் தலைகள் போல நிமிர்ந்திருந்த தாமரை சிற்றரும்புகள்” என்று சற்று பயம் ஏற்படும் வண்ணம் வர்ணித்தாலும், உடனே அடுத்த வரியிலேயே “மங்கைமார் செங்கை ஏந்தி அணி செய்த நல்விளக்கின் அழகிய பிழம்பு போல” என்று தாமரை மொட்டை, ஒளிச்சுடருடன் ஒப்பிடுகிறார்.

மயிலைப் பற்றி இவர் யாது கூறுகின்றார்? “மயிலே! நீயும் பெண்களும் ஒருவருகொருவர் சமம் தான், நடையின் ஒயிலிலாகட்டும், மெல்லிய இடையிலாகட்டும், வண்ணத் தோன்றலிலாகட்டும், நீங்கள் ஒருவருக்கொருவர் நிகர்தான். ஆனால் ஒன்றில் மட்டும் வேறுபடுகிறீர்கள். கலாப மயிலே, நிமிர்ந்து நிற்க உனக்கு நீள் கழுத்து அளித்தாள் இயற்கை அன்னை. ஆனால் பெண்களுக்கோ, அயலான் வீட்டில், அறையில் நடப்பதை எட்டிப்பார்க்காதிருக்க குட்டைக் கழுத்தைக் கொடுத்தாள்’’’ என்று கூறி
“இங்கு வா! உன்னிடம் இன்னதைச் சொன்னேன்
மனதிற் போட்டுவை; மகளிற் கூட்டம்
என்னை ஏசும் என்பதற் காக! “ என்று வம்பிற்கு இழுக்கிறார்.
….
கானகத்தைப் பற்றி இவர் வர்ணனையில் ஒரு காட்சி:
பெட்டைக் கோழியைத் தேடி ஒடும் காட்டுச் சேவலின் சிறகுகள் பட்டு, செடி கொடிகளில் படர்ந்திருந்த கொசுக் கூட்டங்கள் உயரப் பறக்குமாம். அவ்வாறு அவை பறக்கும் போது கரு மேகங்களை ஒத்திருக்குமாம். உடனே கான மயில்கள், கார் மேகங்கள் தான் வந்து விட்டன என்று மகிழ்ந்து தன் தோகைகளை விரித்து ஆடத் துவங்குமாம். அந்த மகிழ்ச்சியான ஆட்டத்தில் சுழன்று, சுழன்று தரையிலிருந்தும், மரக் கிளைகளிலிருந்தும் ஆடும்போது, தோகைகள், மரக்கிளைகளில் இருக்கும் தேன் கூடுகளின் மேல் பட்டு அந்தக் கூடுகள் உடைந்து அதிலிருந்து தேன் வழியுமாம். அந்தத் தேனுக்காகத் தவமிருக்கும் கரடி, வழியும் தேனைக் குடித்தபடி, மயிலுக்கு நன்றி கூறுமாம்.
ஆகா!! என்ன ஒரு கற்பனை வளம். கேட்கும் போதே காட்சி கண் முன் முப்பரிமாணத்துடன் தெரிகின்றதோ?
….
நதியைப் பற்றியும், நதியில் வரும் புனல் பற்றியும் இவர் பார்வையே அலாதி. வறண்ட நதியில் இருக்கும் மணற்துகள்களை, உதிர்ந்த தாழம்பூவின் பொடிகளுக்கு ஒப்பிடுகிறார். விளை நிலங்கள் நடுவே இருக்கும் வறண்ட நதியில் வானவில்லைக் காண்கிறார். பெருஞ்சிங்கமொன்று அறைந்தால், எப்படி ஒரு மத யானை, பலமாக பெரும் சப்தத்துடன் கீழே விழுமோ அவ்வாறு வந்தது வெள்ளம் என்கிறார். கரையோர மரங்கள், தன் கிளைகளிருந்து பூக்களை சொரிந்து வெள்ளத்தை வரவேற்றன வென்றும், உழவுப் பெருமக்கள், தம் நோய் தீர்ந்தது, வறுமை ஒழிந்தது என்று ஆடிப்பாடினரென்றும், அதனைக் கண்டு, எப்படி ஆனந்தக் கூத்தாடும் தம் மக்களைக் கண்டு ஒரு தாய் பேருவகை கொள்வாளோ அவ்வாறு அந்த நதியன்னை, அசைந்து அசைந்து பெருமிதத்துடன் சென்றாள் என்று முடிக்கிறார்.
….
கானலைப் பற்றி பாவேந்தர் கூறியதை உங்களுடன் பகிர்ந்து என் உரையை முடிக்கிறேன். இது பாலை வாழ் நமக்கும் சாலப் பொருந்தும்.
“வானும் கனல்சொரியும்! - தரை
மண்ணும் கனல்எழுப்பும்!
கானலில் நான்நடந்தேன் - நிழல்
காணும் விருப்பத்தினால்!
ஊனுடல் அன்றிமற்றோர் - நிழல்
உயிருக் கில்லைஅங்கே!
ஆன திசைமுழுதும் - தணல்
அள்ளும் பெருவெளியாம்!

ஒட்டும் பொடிதாங்கா (து)- எடுத்
தூன்றும் அடியும்சுடும்;
விட்டுப் புறங்குதித்தால் - அங்கும்
வேகும்! உளம்துடிக்கும்!
சொட்டுப் புனல்அறியேன்! - ஒன்று
சொல்லவும் யாருமில்லை!
கட்டுடல் செந்தணலில் - கட்டிக்
கந்தக மாய்எரியும்!

திடுக்கென விழித்தேன் –நல்ல
சீதளப் பூஞ்சோலை”

ஆம்! விழித்தெழுந்தேன் !! பாவேந்தர் புகழ் பாடும், நல்லெண்ணம் கொண்ட பெருந்தகையார் நடுவில், தமிழே சுவாசம் என்று பூத்துக் குலுங்கும் இச்சோலையிலே.

நன்றி, வணக்கம்.

***************


அரங்கேறிய நிகழ்வு:

பாவேந்தர் நினைவேந்தும் கருத்தரங்கம்:
எழுத்துக்கூடம். இரியாத்.

முன்னிலை: மேதகு இந்தியத் தூதர் , திரு.பரூக் மரைக்காயர் அவர்கள்.
நாள்: 02 மே 2008
நேரம்: மாலை 5 மணி முதல் 7 மணி வரை.
இடம்: இந்தியத் தூதர் இல்லம், தூதரக வளாகம்