Friday, June 13, 2008

சமுதாயச் சீரழிவுகள்

கடந்த சில நாட்களாக கேள்விப்படும் செய்திகள்,  தொண்மை வாய்ந்த, வளர்ந்த செழிப்பான நாகரீகம் என்று நாம் சொல்லிக் கொள்ளும் நமது நாகரீகம் எவ்வளவு கீழ்த்தரமான நிலையை எட்டியிருக்கிறது என்பதை தெளிவு படுத்தும். அறியாமையை விலக்கி, பகுத்தறிவோடு கூடிய உணர்தலை புகட்டக்கூடிய கல்வியறிவு பெற்ற சிலர் எவ்வளவு கீழ்த்தரமான செயல்களைச் செய்துள்ளார்கள் என்று அறியும் போது மனம் வேதனை அடையத்தான் செய்கிறது.

மனைவியும், கணவரும் டில்லி அருகில், நொய்டாவில்  பல் மருத்துத் துறையில் இருப்பவர்கள்.  கணவர், தன் 14  வயது மகளை கொலை செய்திருக்ககூடும் என்று காவல்துறை கருதி அவரை சிறையில் வைத்துள்ளது.

நன்கு படித்த, பல்நாட்டு தொடர்புடைய நிறுவனங்களில் வேலை செய்யும், நான்கு மென்பொருள் பொறியாளர்கள், வேலை வாங்கித் தருவதாகக் கூறி, மிரட்டி பணம் பறித்தார்கள் என்கிற குற்றத்திற்காக பெங்களூருல் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

தன் பழைய காதலனை, புதிய காதலனோடு சேர்ந்து சதி செய்த கொன்ற குற்றத்திற்காக, MBA படித்துக் கொண்டிருந்த மாணவிக்கும் மாணவனுக்கும் புனாவில் உள்ள நீதி மன்றம், ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

தன் உடன் வேலை பார்த்த விமான உபசரிப்பு பெண் ஊழியரை,  தங்கும் விடுதியின் அறையில் கொலை செய்த குற்றத்திற்காக,  சக விமான செலுத்துநர்(co-pilot), மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தன் சகோதரியைக் காதலித்த குற்றத்திற்காக, காதலனைக் கொன்ற வழக்கில், யாதவ் சகோதரர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி, தில்லி நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேற்குறிப்பிட்ட செய்திகள் அனைத்தும், கடந்த ஒரு மாதத்திற்குள் நடந்தவை. ஊடகங்கள் மூலமாக பெரிதாக விவாதிக்கப்பட்டதால் அறியப்பட்டவை. இக்குற்றங்களில் சம்பத்தப் பட்டவர் அனைவரும், மத்திய தர வாழ்க்கை நிலையில் உள்ளவர்கள். நல்ல படிப்பறிவு  பெற்றவர்கள். கல்வியறிவை, தன் மற்றும் தன்னைச் சார்ந்தவர்களின் வாழ்க்கை நெறித்திறனை மேம்படுத்த உபயோகப்படுத்தாமல், நெறி கெட்டு மற்றவர்களின் உயிரைப் பறிப்பதற்கு உபயோகப்படுத்தும் இந்த சமுதாயப் பதர்களை, சட்டங்கள் மிக அதிகபட்ச தண்டனை வழங்கி, சமுதாய மேன்மைக்கு மேலும் பங்கம் வராமல் காக்க வேண்டும்.

Tuesday, May 27, 2008

பிணம் தின்னும் கழுகுகள்

பிணம் தின்னும் கழுகுகள்
தில்லி, நொய்டா சிறுமி கொலை வழக்கில், ஊடகங்களின், குறிப்பாக தொலைக்காட்சிகளின் போக்கு மிகவும் அநாகரிகமானது. எள்ளளவு கூட மனதாபிமானம் இல்லாமல், அச்செய்தியை கூறு போட்டு, கூப்பாடு கூவி விற்று, தங்களின் ‘Air time’ நிரப்பிக் கொண்டதுமில்லாமல், ‘TRP rating’கை உயர்த்தவும் உபயோகப்படுத்திக் கொண்டது. தொலைக்காட்சிகள், வேட்டை நாய் போல் தேடித் தேடி, துருவித் துருவி, தெருவில் போவோர் வருவோர் அனைவரையும் பேட்டி கண்டு, , காவல் துறையினரை ஒரு முனைப்போடு செயல் பட முடியாமல் வைத்து விட்டன.

காவல் துறை வழக்கில் கவனம் செலுத்தாமல், பேட்டி கொடுப்பதிலும், அறிக்கை விடுவதிலும்தான் அதிக கவனம் செலுத்தியுள்ளார்கள். வழக்கு ஆரம்பித்த இரண்டாவது நாளிலேயே காவல் துறை அதிகாரி மாற்றப்படுகிறார். இத்தனைக்கும் அவர் செய்தது என்ன? ஃபாரன்ஸிக் அறிக்கை வந்த பிறகுதான் திட்ட வட்டமாக எதுவும் கூற முடியும். அதற்கு ஓரிறு வாரங்கள் ஆகலாம் என்றார். அதில் ஒன்றும் தவறில்லையே? முறையாக ஒரு வழக்கை நடத்தினால்தான் அதில் தவறின்றி முடிவெடுக்க முடியும். இவ்வளவு உணர்ச்சி பூர்வமான ஒரு வழக்கை எடுத்தோம், கவிழ்த்தோம் என்று நடத்த முடியுமா?

அவருக்குப் பின் பொறுப்பேற்ற காவல் துறை அதிகாரி என்ன பேட்டி கொடுக்கிறார்? அந்த சிறுமியும், வீட்டில் உதவியாளாராக இருந்தவரும் இருந்த நிலை கண்டிக்கத் தக்கதாக (‘objectionable’) இருந்ததாகவும், ஆனால் அதே சமயம், அவர்கள் தன்னிலை (compromising) தவறி இல்லை என்றும் பேட்டி கொடுக்கிறார். இவர் என்ன திரைக்கதை வசனகர்த்தாவா, கதை எழுத? இந்த வார்த்தைகளின் விளைவுகள் தெரியாமல் பிரயோகப்படுத்தலாமா? அதுவும் SSP போன்ற உயர் பதவியில் இருப்பவர்கள்? இவர்கள் பேட்டி கொடுக்கும் நேரத்தை வழக்கில் செலுத்தியிருந்தால், சிறுமியின் மரணத்திற்கான காரண, காரியங்களைக் கண்டு பிடித்திருக்கலாம்.

ஊடகங்கள் இச்சம்பவத்தை ஒரு “கௌரவக் கொலை (Honor killing)” என ஒரு புது அடைமொழி கொடுத்து வர்ணிக்கின்றன. ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானில் ஒன்று அறியாத பலரை தவறுதலாகக் கொன்றதற்கு, அமெரிக்கர்கள் கூறிய “collataeral damage” என்கிற வர்ணணை போல, சிறிதும் ஈவு இரக்கமின்றி எப்படி இவர்களால் இப்படிக் கூறமுடிகின்றது. இவர்களுக்கு, குடும்பம், குழந்தைகள் இல்லையா? வேறு கிரகத்திலிருந்து வந்தவர்களா?
காவல்துறையினர் கூறும் ஒரு முக்கிய தடையம் என்ன தெரியுமா? ஹரித்துவாரில், ஈமக் கிரியை நடத்தும் இடத்தில், சிறுமியின் அப்பா, மரணம் இரவு 2 மணிக்கு நடந்ததாக பதிவு செய்துள்ளாராம். ஆனால் விசாரணையின் போது காலை 6 மணிக்குத்தான் தனக்கு மரணம் பற்றி தெரியும் என்றாராம். சம்பவம் நடந்த நேரமும், தெரிந்த நேரமும் வித்தியாசமாக இருக்கலாமே? இதில் என்ன தடையம் கிடைத்திருக்கக்கூடும். இந்த விதமான கோமாளித்தனமான விதத்தில் தான் விசாரணை செல்கிறது.

போதாதற்கு, உடன் பணி புரியும் பெண் மருத்துவருடன் தகாத உறவு என்று ஒரு குற்றச் சாட்டு. இனி அலுவலகத்தில் பணி புரியும் அனைவரும் கூடுமான வரை எதிர் பாலர் இல்லாத அலுவலகத்தில் தான் பணி செய்ய வேண்டும். நம் போதாத காலம், ஏதேனும் சம்பவம் நடந்து விட்டால், இது மாதிரிதான் நம் மானமும் பறிபோகும். தமிழகக் காவல்துறை கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் இருந்து கஞ்சா எடுப்பதைப்போல, இந்த தகாத உறவு, வடக்கத்திய பாணி போலும்.

இதில் முக்கியமாக இந்த சிறுமியின் மானத்தை விலை போட்ட இந்த தொலைக்காட்சிகளும், காவல் துறையும், துச்சாதனனை விடக் கொடியவர்கள். ஊடகங்கள், பிணம் கேட்பாரற்றுக் கிடந்தால் எப்படி கழுகுகளும், வல்லூறுகளும் அதை கொத்திக் கிளறி பிண்டத்தை வாறி இறைக்குமோ, அப்படி பால் வடியும் முகம் கொண்ட சிறுமியை, பச்சிளம் மாறாத ஒரு குழந்தையை சின்னா பின்னப் படுத்தி விட்டார்கள். இதில் என்ன கொடுமை என்றால் இவர்கள் அனைவரும், தத்தம் தொழிலில், நன்கு படித்து, அனுபவம் பெற்றவர்கள். செய்தியை மக்களுக்கு எப்படி அளிக்க வேண்டும் என்று அறிந்தவர்கள். ஒரு துர்மரணச் செய்தியை எப்படி வியாபாரமாக மாற்றினார்கள் என்றுதான் தெரியவில்லை.

இதில் என்ன ஒரு அலங்கோலம் என்றால், 25ம் தேதி ஊடகங்களின் முக்கிய செய்தி கர்நாடக தேர்தல் நிலவரம் ஆகும். கல்யாணப் பந்தி முடிந்து எச்சில் இலைகள் குப்பைத்தொட்டியில் விழும் போது எப்படி தெரு நாய்கள், பக்கத்து தொட்டியிலிருந்து அடித்து, பிடித்து இன்னொரு குப்பைத் தொட்டிக்குத் தாவுமோ அப்படித் தாவி தேர்தல் செய்திகளுக்கு முதலிடம் கொடுத்தனர். கேட்டால் இதுதான் இதழியல் (journalism) என்பார்கள், வெட்கம் கெட்டவர்கள்.

இந்நிகழ்வுகளில், பாரட்டப்பட வேண்டியவர்கள் மத்திய மந்திரி திருமதி ரேணுகா சவுத்திரியும் மற்றும் சில அரசு சாரா அமைப்புகளும்தான். ஒரு சிறுமியை தவறாக சித்தரித்து களங்கப்படுத்தியதற்காகவும், அவர் பெயரைக் கூறி அடையாளத்தை வெளிப்படுத்தியதற்காகவும் juvenile சட்டங்களின் படி காவல் துறையினர்மீது நடவடிக்கை எடுக்கப் போவதாகக் கூறியுள்ளனர். அவர்கள் தொலக்காட்சிகளின் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Monday, May 05, 2008

பாவேந்தர் காட்டும் இயற்கை எழில்

சென்ற வெள்ளிக்கிழமை (மே மாதம் 2 ம் தேதி) பாவேந்தர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பற்றிய ஒரு கருத்தரங்கம் ரியாத், சௌதி அரேபியாவில் நடை பெற்றது. அதில் நான் வாசித்தளித்த கட்டுரை.
........

பாவேந்தர் காட்டும் இயற்கை எழில்
(கோ. பாலமுகுந்தன்)

மேதகு இந்தியத் தூதர் அவர்களுக்கும், எழுத்துக்கூடத்தின் உறுப்பினர்களுக்கும், மற்றும் ஏனைய பெரியோர்களுக்கும் என் இனிய மாலை வணக்கங்கள்.

பாவேந்தரின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், எனக்கும் ஒரு பங்களித்து, சந்தர்ப்பம் தந்துதவிய ஒருங்கிணைப்பாளர்களுக்கு என் நன்றி.

ஓர் இரவு திரைப்படத்தில் வரும் இந்த பாடலை ஒலி பரப்பி என் உரையை வாசிக்கிறேன்.

“துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ அல்லல் நீக்க மாட்டாயா
வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே எம் வாழ்வில் உணர்வு சேர்க்க
நீ அன்றை நற்றமிழ்க் கூத்தில் முறையினால் ஆடிக் காட்ட மாட்டாயா
அறமிதென்றும் மறமிதென்றும் யாம் அறிகிலாதபோது
தமிழ் இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல் இயம்பிக் காட்ட மாட்டாயா..”

இதயத்தின் வலிக்கு இசையை அழைத்தவன். வன்முறையை நீக்கி, ஏழ்மையைக் களைவதற்கு தமிழை துணைக்கு அழைத்தவன். கல்வி புகட்ட வள்ளுவனை ஆசானாய் ஏற்றவன். தமிழே மூச்சாய், தாரக மந்திரமாய், தரணியெங்கும் தழைத்தோங்க சங்க நாதமிட்டவன்.

பாவேந்தர் பற்றி பேசும் போது இயற்கையுடன் அவர் கொண்டிருந்த பிணைப்பை மறக்க முடியுமா? புரட்சிக் கவிஞரின் மறு பக்கம் என்று சொல்லக் கூடிய வகையிலே அவர் இயற்கையை வர்ணித்து எழுதிய ‘அழகின் சிரிப்பு’ ஒரு தெவிட்டாத தேன். மங்காத ஒளி. வர்ணனைகள் காட்சிகளை கண் முன் கொண்டு நிறுத்தும். கை கோர்த்து நடத்திச் செல்லும்.

அவற்றிலிருந்து சில வர்ணணைகளை, காட்சிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.

கடற்கரையை, தினம் வந்து போகும் காதலர்கள் பதித்த கால் தடங்களால் வரையப்பட்ட ஒரு பெரிய புள்ளிக் கோலம் என்று வர்ணிக்கும் கவிஞர்கள் மத்தியில், அதை ஒரு மணல் மெத்தையென்றும், அங்கே மேவும் நீர் அலைகளை, கல்விக் கூடத்தில் பாடம் பயிலும் இளைஞர்களின் எழுச்சி மிகு பூரிப்பிற்கு ஒப்பிடுவதும் இவர் போன்ற புரட்சியாளர்களால் மட்டும்தான் முடியும்.
…..
கடல் ஆர்ப்பரித்த முழக்கத்தை இசையாய் வரித்த வாணர் இவர்.
“கடல் நீரும் நீல வானும் கை கோக்கும்!
அதற்கிதற்கும் இடையிலே கிடக்கும் வெள்ளம் எழில் வீணை;
அவ்வீணை மேல் அடிக்கின்ற காற்றோ வீணை நரம்பினை அசைத்து இன்பத்தை
வடிக்கின்ற புலவன்!
தம்பி, வண்கடற் பண் பாடல் கேள்”
அதனால் தான் “துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா..” என்று ஏங்கினானோ?
….
‘அழகு’ என்றாலே கவிஞர்களுக்கு எப்போதும் ஒரு பரவசம்தான். அழகைக் கண்டால் ‘ஆடாத மனமும் உண்டோ?’ அழகை ஒரு பெண்ணாகவே பாவிக்கும் கவிஞர்கள் தான் இந்தப் புவியில் உண்டு. சுப்பு ரத்தினம் இதற்கு விதி விலக்கா? ஆனால் என்ன, மற்றவர்கள் மங்கையை (அழகை) நிலவில், இரவில் அதன் ஒளியில் கண்டனர். இவர் கதிரவனின் இளம் காலைக் கதிரில் கண்டார். கலப்பையுடன் உழவன் செல்லும் புது நடையில் கண்டார்.

தென்றலை திகட்டாமல் வர்ணிக்கும் வள்ளல் இவர். “தென்றல் வந்து என்னைத் தொடும். சத்தமின்றி முத்தம் இடும்” என்றார் ஒரு கவிஞர். இவரும் அவ்வாறே தென்றலின் குறும்பை வர்ணிக்கிறார். “பெண்கள் விலக்காத உடையை நீ போய் விலக்கினும், விலக்கார் உன்னை” என்று. குழந்தையின் நெற்றியில் விழும் சிறு குழலை அசைந்தாட்டி, மழலையை சிலிர்க்க வைக்கும் தென்றலைப் போற்றுகிறார்.
“கழுகொடு, நெடிய தென்னை, கமழ்கின்ற சந்தனங்கள்,
சமைகின்ற பொதிகை அன்னை, உனைத்தந்தாள், தமிழைத் தந்தாள்,
தமிழ் எனக்கு அகத்தும், தக்கத் தென்றல் நீ புறத்தும், இன்பம்
அமைவுறச் செய்வதை நான் கனவிலும் மறவேண் அன்றோ?” என்று தென்றலுக்கு தலை வணங்கி நன்றி சொல்கின்றார்.
….
குமுத மலரை பெரும்பாலான கவிகள், காதலியின் இதழ்களுக்கும், கண்ணிற்கும் ஒப்பிடுகையில், “கரிய பாம்பின் தலைகள் போல நிமிர்ந்திருந்த தாமரை சிற்றரும்புகள்” என்று சற்று பயம் ஏற்படும் வண்ணம் வர்ணித்தாலும், உடனே அடுத்த வரியிலேயே “மங்கைமார் செங்கை ஏந்தி அணி செய்த நல்விளக்கின் அழகிய பிழம்பு போல” என்று தாமரை மொட்டை, ஒளிச்சுடருடன் ஒப்பிடுகிறார்.

மயிலைப் பற்றி இவர் யாது கூறுகின்றார்? “மயிலே! நீயும் பெண்களும் ஒருவருகொருவர் சமம் தான், நடையின் ஒயிலிலாகட்டும், மெல்லிய இடையிலாகட்டும், வண்ணத் தோன்றலிலாகட்டும், நீங்கள் ஒருவருக்கொருவர் நிகர்தான். ஆனால் ஒன்றில் மட்டும் வேறுபடுகிறீர்கள். கலாப மயிலே, நிமிர்ந்து நிற்க உனக்கு நீள் கழுத்து அளித்தாள் இயற்கை அன்னை. ஆனால் பெண்களுக்கோ, அயலான் வீட்டில், அறையில் நடப்பதை எட்டிப்பார்க்காதிருக்க குட்டைக் கழுத்தைக் கொடுத்தாள்’’’ என்று கூறி
“இங்கு வா! உன்னிடம் இன்னதைச் சொன்னேன்
மனதிற் போட்டுவை; மகளிற் கூட்டம்
என்னை ஏசும் என்பதற் காக! “ என்று வம்பிற்கு இழுக்கிறார்.
….
கானகத்தைப் பற்றி இவர் வர்ணனையில் ஒரு காட்சி:
பெட்டைக் கோழியைத் தேடி ஒடும் காட்டுச் சேவலின் சிறகுகள் பட்டு, செடி கொடிகளில் படர்ந்திருந்த கொசுக் கூட்டங்கள் உயரப் பறக்குமாம். அவ்வாறு அவை பறக்கும் போது கரு மேகங்களை ஒத்திருக்குமாம். உடனே கான மயில்கள், கார் மேகங்கள் தான் வந்து விட்டன என்று மகிழ்ந்து தன் தோகைகளை விரித்து ஆடத் துவங்குமாம். அந்த மகிழ்ச்சியான ஆட்டத்தில் சுழன்று, சுழன்று தரையிலிருந்தும், மரக் கிளைகளிலிருந்தும் ஆடும்போது, தோகைகள், மரக்கிளைகளில் இருக்கும் தேன் கூடுகளின் மேல் பட்டு அந்தக் கூடுகள் உடைந்து அதிலிருந்து தேன் வழியுமாம். அந்தத் தேனுக்காகத் தவமிருக்கும் கரடி, வழியும் தேனைக் குடித்தபடி, மயிலுக்கு நன்றி கூறுமாம்.
ஆகா!! என்ன ஒரு கற்பனை வளம். கேட்கும் போதே காட்சி கண் முன் முப்பரிமாணத்துடன் தெரிகின்றதோ?
….
நதியைப் பற்றியும், நதியில் வரும் புனல் பற்றியும் இவர் பார்வையே அலாதி. வறண்ட நதியில் இருக்கும் மணற்துகள்களை, உதிர்ந்த தாழம்பூவின் பொடிகளுக்கு ஒப்பிடுகிறார். விளை நிலங்கள் நடுவே இருக்கும் வறண்ட நதியில் வானவில்லைக் காண்கிறார். பெருஞ்சிங்கமொன்று அறைந்தால், எப்படி ஒரு மத யானை, பலமாக பெரும் சப்தத்துடன் கீழே விழுமோ அவ்வாறு வந்தது வெள்ளம் என்கிறார். கரையோர மரங்கள், தன் கிளைகளிருந்து பூக்களை சொரிந்து வெள்ளத்தை வரவேற்றன வென்றும், உழவுப் பெருமக்கள், தம் நோய் தீர்ந்தது, வறுமை ஒழிந்தது என்று ஆடிப்பாடினரென்றும், அதனைக் கண்டு, எப்படி ஆனந்தக் கூத்தாடும் தம் மக்களைக் கண்டு ஒரு தாய் பேருவகை கொள்வாளோ அவ்வாறு அந்த நதியன்னை, அசைந்து அசைந்து பெருமிதத்துடன் சென்றாள் என்று முடிக்கிறார்.
….
கானலைப் பற்றி பாவேந்தர் கூறியதை உங்களுடன் பகிர்ந்து என் உரையை முடிக்கிறேன். இது பாலை வாழ் நமக்கும் சாலப் பொருந்தும்.
“வானும் கனல்சொரியும்! - தரை
மண்ணும் கனல்எழுப்பும்!
கானலில் நான்நடந்தேன் - நிழல்
காணும் விருப்பத்தினால்!
ஊனுடல் அன்றிமற்றோர் - நிழல்
உயிருக் கில்லைஅங்கே!
ஆன திசைமுழுதும் - தணல்
அள்ளும் பெருவெளியாம்!

ஒட்டும் பொடிதாங்கா (து)- எடுத்
தூன்றும் அடியும்சுடும்;
விட்டுப் புறங்குதித்தால் - அங்கும்
வேகும்! உளம்துடிக்கும்!
சொட்டுப் புனல்அறியேன்! - ஒன்று
சொல்லவும் யாருமில்லை!
கட்டுடல் செந்தணலில் - கட்டிக்
கந்தக மாய்எரியும்!

திடுக்கென விழித்தேன் –நல்ல
சீதளப் பூஞ்சோலை”

ஆம்! விழித்தெழுந்தேன் !! பாவேந்தர் புகழ் பாடும், நல்லெண்ணம் கொண்ட பெருந்தகையார் நடுவில், தமிழே சுவாசம் என்று பூத்துக் குலுங்கும் இச்சோலையிலே.

நன்றி, வணக்கம்.

***************


அரங்கேறிய நிகழ்வு:

பாவேந்தர் நினைவேந்தும் கருத்தரங்கம்:
எழுத்துக்கூடம். இரியாத்.

முன்னிலை: மேதகு இந்தியத் தூதர் , திரு.பரூக் மரைக்காயர் அவர்கள்.
நாள்: 02 மே 2008
நேரம்: மாலை 5 மணி முதல் 7 மணி வரை.
இடம்: இந்தியத் தூதர் இல்லம், தூதரக வளாகம்

Tuesday, April 22, 2008

சொர்க்கத்தின் வாசற்படி…….

சொர்க்கத்தின் வாசற்படி…….

 

அது ஒரு மாலைப்பொழுது. சுமார் 7 மணி இருக்கும். தொலைபேசி ஒலிக்க, எடுத்துப் பேசினேன். "ஹலோ.." எதிர் முனையில் சற்றுநேரம் மௌனம். மீண்டும் "ஹலோ". கம்மிய குரலில் "….கிருஷ்ணமூர்த்தி மாமா is no more. அரை மணி நேரம் முன்னாடி ஆச்சாம். நட்டு மாமாதான் கூட இருந்தாராம்…" என்று சொல்லி நிறுத்தினாள் என் சகோதரி. சமாசாரத்தைக் கிரகிக்க சில நொடிகள் தேவைப்பட்டது. இந்த இழப்பு எதிர்பார்த்த ஒன்று என்றாலும், அது நிகழும் போது, உள்வாங்குவது அவ்வளவு எளிதானதல்ல. சதையும் இரத்தமுமாய் இருந்த ஒரு உறவு, திடீரென இல்லை, இனி வெறும் சடலம். சில மணி நேரங்களுக்குப் பிறகு வெறும் நினைவுகள்தான் என்பது எளிதில்  சீரணிக்கமுடியாத ஒன்று. எங்கள் மாமா, கடந்த ஒரு வருடமாகவே ஆஸ்பத்திரியும், வீடுமாய் மாறி மாறி வசித்துக்கொண்டிருந்தார். கடந்த முறை அவரைப்பார்த்த போது, இவர் இன்னும் ஓரிறு மாதங்கள்தான் இருப்பார் என்று நினத்தேன். அவர் படும் சிரமங்களைப் பார்த்த போது, எல்லோரும் மேலும் மேலும் வாழப் பிரார்த்திக்க, நான் இவர் பட்ட துன்பங்கள் போதுமென்று சீக்கிரம் விடை பிரியவே பிரார்த்தித்தேன். எழுந்து சென்று பூஜை அலமாரியில் இருந்த விளக்கில் எண்ணை ஊற்றி, ஏற்றினேன். இறந்தவருடைய ஆத்மாவை சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்ல பிரார்த்தித்தேன்.

 

இந்தச் சம்பவம் நடந்த சுமார் நான்கு வாரங்களுக்கு முன்பு…

 

முன்னிரவு நேரம். உறங்கப்போய் ஒன்றரை மணி நேரம் ஆகியிருக்கும். தொலைபேசி அழைத்து தூக்கத்தைக் கலைத்தது. நாடு, மக்களை விட்டு விட்டு, பிழைப்பைத்தேடி வெளியூரில் இருக்கும் எனக்கு, இரவில் தொலைபேசி அடித்தாலே மனத்தில் எப்போதும் ஒரு கலக்கம் வந்துவிடும். பதற்றத்துடன் எடுத்தேன். "ஹலோ.." எதிர் முனையில் சற்றுநேரம் மௌனம். மீண்டும் "ஹலோ". கம்மிய குரலில் "…நாந்தான் பேசறேன்.. அண்ணா passed away. இப்போதான் ஒரு மணி நேரம் ஆச்சு. அவர் ஏற்கனவே கிளம்பி போயாச்சு. நான் மத்தவங்க எல்லாம், காலைலே ஃப்ளைட்லே போறோம்.". இதுவும் என் அதே சகோதரி. இறந்தவர்  சகோதரியின் பெரிய மைத்துனர். அவர் பெயரும் கிருஷ்ணமூர்த்திதான். என்னால் வேறு எதுவும் பதில் பேச முடியவில்லை. குரல் நெஞ்சடைக்க, "அப்படியா.. பாவம். ரொம்ப கஷ்டப்பட்டாரா கடைசியிலே?" . "கொஞ்சம் தேறிண்டுதான் வந்தது. நினைவு கூட அப்பப்ப வந்து போச்சு. சரி, தப்பிச்சுடுவார்னு நினச்சோம். இப்படியாகும்ன்னு எதிர்பார்க்கலே…" . "மன்னிக்கு என்னோட வருத்தத்தை சொல்லு. பாட்டி இதை எப்படி எடுத்துக்கப் போறான்னுதான் தெரியலே. Take care of them." தொலைபேசியை துண்டித்தேன். தலையணையை எடுத்து சுவற்றில் அண்டை கொடுத்து சற்று நிமிர்ந்தவாறு உட்கார்ந்தேன். அதிகாலையில், பூஜைக்காக மலர் பறிக்க மாடி பால்கனிக்கு சென்று, எட்டிப் பறிக்கையில், கால் தவறி கீழே விழுந்தார். கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆஸ்பத்திரி வாசத்திற்குப்பின் வந்த முடிவு. எழுந்து சென்று பூஜை அலமாரியில் இருந்த விளக்கில் எண்ணை ஊற்றி, ஏற்றினேன். இறந்தவருடைய ஆத்மாவை சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்ல பிரார்த்தித்தேன்.

 

இறந்த என் மாமா கிருஷ்ணமூர்த்திக்கு வயது 71 இருக்கும். பார்க்க ஆஜானுபாகுவாக, சிவந்த மேனியுடன், உயரமாக இருப்பார். எங்கள் சின்ன வயதில், அவர் ஒரு சிம்ம சொப்பனம். அவர் வருகிறார் என்றாலே சப்த நாடியும் ஒடுங்கி, கூடத்தில் ஒரு மூலையில் போய் பதுங்கிக் கொள்வோம். ஆனால் ரொம்ப அன்பானவர். கோடை விடுமுறைக்கு கிராமத்திற்கு சென்றிருந்த சிறுவர்களையெல்லாம், இரண்டு வில் வண்டிகளில் அள்ளிப் போட்டுக்கொண்டு, பத்துக் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கொள்ளிடத்திற்கு அழைத்துச் சென்று, முட்டியளவே தண்ணீர் இருந்த அந்த ஆற்றில் போட்ட ஆட்டம், நாற்பது ஆண்டுகளாகியும், இன்னும் மறக்க வில்லை. அவருடன் பிறந்தவர்கள் 6 பேர் ( இரண்டு சகோதரர்கள், நான்கு சகோதரிகள்). வாரிசுகளில் நான்காவது, ஆனாலும், மூத்த ஆண்மகன். எனவே அவர் பேச்சுக்கு குடும்பத்திலே எப்போதும் ஒரு மரியாதை இருக்கும். எப்போதும் தும்பைப்பூ போல வெள்ளை வெளேரென்ற எட்டு முழ வேட்டியுடன், புஜம் வரை மடித்து (சுருட்டி, சுருட்டி) விடப்பட்ட முழுக்கை சட்டையுடன் தான் காட்சியளிப்பார். இடுப்பு வேட்டியில் சொருகி வைக்கப்பட்ட பொடி டப்பா. சர்ர்ர்ர்ரெண்று எடுத்து உறியும் போது அவர் அடையும் ஆனந்தம் இருக்குமே.. அடடா.. (சிறு வயதில், ஒரு சமயம் அவருக்குத் தெரியாமல் ஒரு சிட்டிகையை எடுத்து உறிஞ்சி, அந்தப் பொடி, ரொம்ப எஜமான விசுவாசத்துடன் நம்மை போட்டுக் கொடுத்தது வேறு விஷயம்).

 

இறந்த அண்ணா என்கிற கிருஷ்ணமூர்த்தி, சின்னவர்களால் 'அண்ணா' என்றும், மற்றவர்களால் 'அம்பி' என்றும் அழைக்கப்பட்டவர். வயது 70க்கும் மேல். சிவந்த மேனியுடன் சாதாரண உயரத்துடன் இருப்பார். முகத்தில் சாந்தம் வாசம் புரியும். குரல் அதிராது. ரொம்ப அன்பானவர். சிறு குழந்தையாகட்டும், வயதில் முதிர்ந்தவராகட்டும், யார் வந்தாலும், அவருடன் சிறிது நேரம் செலவிடாமல் இருக்க மாட்டார். குடும்பத்தில் மூன்றாவது வாரிசு என்றாலும் மூத்த ஆண்மகன். உடன் பிறந்தவர்கள் 6 பேர் (மூன்று சகோதரிகள், மூன்று சகோதரர்கள்). சிறு வயதிலேயே குடும்ப பாரத்தை தன் தலை மேல் தாங்கியவர். அவர் பேச்சுக்கு குடும்பத்தில் மறு வார்த்தை இருந்ததில்லை. எப்பொழுதும் அரைக்கை சட்டை, வெள்ளை வெளேரென்று வேட்டி. நெற்றியில் சந்தனக் கீற்று. தினமும் பூஜை முடிக்காமல் வெளியில் கிளம்ப மாட்டார்.

 

என் மாமா ஒன்றும் வாழ்க்கையில் மிகப் பெரிய சாதனைகளையோ சரித்திரங்களையோ படைக்கவில்லை. மாறாக அவரிடமிருந்த சில பழக்க வழக்கங்களே அவருக்கு எமனாய் அமைந்தன. ஆனால் அவரால் எவருக்கும் ஒரு துன்பமும் நேர்ந்ததில்லை. எவரையும் கடிந்து பேசியதில்லை. எப்போழுது போனாலும் புன்முறுவலுடன் அவர் வரவேற்கும் பாணியே அலாதி. எவரையும் தன் வயப்படுத்தக்கூடிய சாதுர்யம். ஈடு பட்ட விஷயங்களில் அவரின் அறிவும், புத்திக்கூர்மையும் அசாதாரணம். வாய்ப்பும், நேரமும் அமையாததினால், பிரகாசிக்க வில்லை. "..ஏய் ஜெயராமா, வந்திருக்கிறது என் மருமான். அவன் ஒரு வீடு கட்றான். அதுக்கு மரம் பாக்கத்தான் வந்திருக்கோம். நல்ல சீஸண்டு மரம் இருக்கா?.... ".  "…..என்ன கிருஷ்ணமூர்த்தி, நீ போய் என்ன கேக்கிறியே. போய்ப்பாரு பின்னாடி. நிறைய இருக்கு. உனக்கு எது வேணுமோ அத மார்க் பண்ணிட்டுப் போ. கார்பெண்டரை விட்டு ஸைஸ் பண்ணி வீட்டுக்கு அனுப்பிக் கொடுக்கிறேன்.." என் வீட்டில் உள்ள ஒவ்வொரு நிலையும், வாசல், சன்னல் கதவுகளும் என்றென்றும் அவர் புகழ் பாடும். "....கிருஷ்ணமூர்த்தியைக் கூப்பிட்டு அக்கவுண்ட்ஸை சரி பார்க்கச் சொல். அதுக்கப்புறம் ஆடிட்டர்கிட்டே கொடுக்கலாம்…" ஆடிட்டரை விட இவரின் வரவு செலவு பதியலில், திருப்தி அடந்த முதலாளி. ஆனால், தான் சம்பாத்தித்த சொத்துக்களை கணக்கில் வைத்துக்கொள்ளாமல், செலவழித்து கடைசியில் ஒன்றுமே இல்லாமல் நின்றார்.

 

அண்ணா கிருஷ்ணமூர்த்தி சிறு வயதிலேயே குடும்ப பாரத்தை, தாய் மாமனுடன் சேர்ந்து தன் தலையில் சுமந்து அனைவரையும் ஒரு நல்ல நிலைக்கு ஆளாக்கியவர். பிறர் பாரத்தை தன் பாரம் போல் கருதி தன்னலம் பாராமல் உழைத்தவர். தான் ஈட்டிய அனைத்தையும்  பிறருக்கு கொடுத்து கடைசி வரைக்கும் தனக்கு என்று ஒன்றுமே இல்லாமல் வாழ்ந்தவர்.

 

அன்று ஈமக்கிரியை நடக்கும் தினம். தெருவெங்கும் அடைத்து உற்றார்களும், உறவினர்களும், நண்பர்களும், தெரிந்தவர்களும், தெரியாதவர்களும். சகோதரிகளின் மகன்களும், மகள்களும் தத்தம் துணையோடு, தனக்கு தொட்டிலிட்டு, நெல்லில் பெயர் எழுதியதையும், தன்னை தட்டாமாலை சுற்றியதையும், தோளில் தூக்கி வைத்து விளையாடிய அதே மாமன், திருமணத்தின் போது தன் தோள் மேல் தூக்கி மாலை மாற்றியதையும் நினைவு கூர்ந்து, அம்மான் சீர் செய்த மாமனுக்கு மரியாதை செலுத்த வந்திருந்தனர். சகோதரிகள், தத்தம் வீடுகளில் நடந்த நல்லது கெட்டது நிகழ்வுகளில் முதல் ஆளாய் நின்று முழுச் சுமையையும் தல் தலை மேல் போட்டுக்கொண்டு உழைத்த, தனக்கு பொங்கலுக்கும், கார்த்திகைக்கும் வருடா வருடம் சீர் செய்த உடன் பிறப்புக்கு அஞ்சலி செலுத்தி அழுது கொண்டிருந்தனர். துணையைப்பிரிந்த மனைவியோ, வாழ்வே ஒரு கேள்விக்குறியாய் மாறியதே என்று அழக்கூடத் தோன்றாமல் சூன்யப் பார்வைப் பார்த்து, சொல்வார் சொல்வதை, ஒரு நடைப்பிணம் போல் செய்து கொண்டிருந்தார். நினைவுகள் மனதில் ஒரு நிழற்படமாய் ஓட, பிரிவின் துயரம் பின்னனியில் சோக கீதமாய் ஒலிக்க, அனைவருடைய மனமும் மௌனமாய் அழுது கொண்டிருந்தன. ஆனால், சம்பிரதாயங்களும், சடங்குகளும், மனதின் வலிக்கும் எங்களுக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை என்று தத்தம் கடமையை ஆற்றிக் கொண்டிருந்தன.

 

அன்று மேலுலகத்தில் வேதங்களில் சொல்லப்படும் கடைசித் தீர்ப்பு நாள். கணக்காயர் வந்து அமர்ந்தார். கணக்கர்கள் தத்தம் பதிவேடுகளோடும் அனைவரைப் பற்றிய குறிப்புக்களோடும் தயாராக வத்திருந்தனர். கணக்காயர் ஆரம்பித்தார்.

"கணக்கர்களே! உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தாலும், நான் ஒரு முறை நினைவு படுத்துகிறேன். இங்கே வந்திருக்கும் இறந்தவர்களின் இதயங்களை நாம் ஒரு மெல்லிய இறகோடு எடையில் ஒப்பிடுவோம். வாழும் காலத்தில் பாவங்கள் செய்த மனிதர்களின் இதயம் அந்த பாவ மூட்டையோடு வந்திருந்தால், அதை தராசுத் தட்டில் இடும் போது, இறகு இருக்கும் தட்டை விட அதிக பளு உள்ளதாக இருக்கும். அதனால், அது கீழே இறங்கும். அந்த மனிதர்கள் நரகத்திற்கு அனுப்பப்படுவர். ஆனால் இதயம், இறகை விட இலேசாக இருந்து, இறகு வைத்திருக்கும் தட்டு, கீழே இறங்கினால், அவர்கள் சொர்க்கத்திற்கு அனுப்பப்படுவர். "

 

ஒவ்வொருவரைப்பற்றிய குறிப்பும் படிக்கப்பட்டு, இதயங்கள் எடை போடப்பட்டு அவர்கள் எங்கு செல்லத் தகுதியானவர்களோ அங்கே அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

'அம்பி' என்கிற 'அண்ணா' கிருஷ்ணமூர்த்தியின் முறை வந்தது. குறிப்பு படிக்கப்பட்டது. "இவர் வாழ்க்கையில் தனக்கென வாழாமல், பிறருக்காகவே வாழ்ந்தார். கர்ணன் எப்படி தன்னுடன் ஒட்டிப் பிறந்த கவச, குண்டலங்களை, கண்ணன் தானமாக கேட்ட போது தயங்காமல் வாரி வழங்கினானோ, அதே போல தன் உடல் உறுப்பை, தன் இளவல் உயிர் வாழ வழங்கிய உத்தமர்…….." என்று கூறி இதயத்தை தராசுத் தட்டில் இட்டனர். இறகு வைத்திருக்கும் தட்டு அதிக பளு காரணமாக கீழே இறங்கியது. "…இவர் சொர்க்கத்திற்கு செல்வாராக.." கணக்காயர் கட்டளையிட்டார்.

 

மாமா கிருஷ்ணமூர்த்தியின் முறை. "இவர் வாழ்ந்த வாழ்க்கை நெறி முறை குடும்பத்தினராலும், மற்றவர்களாலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. தன் துயரங்களை மறக்க, இவர் தேர்ந்தெடுத்த வழி சரியானதல்ல என்றாலும், இவர் வாழ்க்கை ஒரு எதிர்முறைப் பாடமாக அவர் குடும்பத்தினருக்கும் சுற்றத்தாருக்கும் செயல் பட்டது. இதன் மூலமாக பலருக்கு சரியான வாழ்க்கை நெறியை அவர் கற்றுத் தந்துள்ளார்...." என்று கூறி இதயத்தை தராசுத் தட்டிலிட்டனர். இரண்டு தட்டுக்களும் மேலும் கீழும் ஏறி இறங்கின.

 

முடிவில் இரண்டு தட்டுக்களின் ஆட்டங்களும் அடங்க, தராசு முள் சம நிலையில் நின்றது.

.

.

.

.

.

.

.

"…இவரும் சொர்க்கத்திற்கு செல்வாராக.."


Thursday, April 10, 2008

உயர் கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு - உச்ச நீதி மன்றம் தீர்ப்பு.

உச்ச நீதி மன்றம் உயர் கல்வி நிலையங்களில் இட ஒதிக்கீடு தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பளித்துள்ளது. பின் தங்கிய வகுப்பினருக்கான 27 விழுக்காடு வழங்கிய சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது.  ஆனால்,  பொருளாதார நிலையில் முன்னிலையில் ( creamy layer) உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு  இந்த இட ஒதிக்கீடு கிடையாது என்றும் தெளிவு செய்துள்ளது.

இட ஒதுக்கீட்டை ஒரு கால வரைக்குள் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, April 05, 2008

இன்னுமொரு ‘காவிரி’

இன்றைய நாளிதழ்களில் வெளியான செய்தி
“The central leadership of the party, however, had adopted a cautious approach on Friday saying the state units of the party in Karnataka and Tamil Nadu were free to take their own stands in the matter”

தேர்தல் வந்து விட்டது. எஸ்.எம். கிருஷ்ணாவை கவர்னர் பதவிலிருந்து விலகச் செய்து, தேர்தல் குழுவின் தலைவராக போட்டதின் காரணமே, எப்பாடு பட்டாவது தேர்தலில் வெல்ல வேண்டும் என்பதுதான். அல்வா மாதிரி வந்து மடியில் விழுந்த ஒகனேக்கல் விவகாரத்தை விட்டு விடுவார்களா? எதைத் தின்னால் பித்தம் தெளியும் என்று அலையும் காங்கிரஸ் கட்சிக்கு, கொள்கை என்று ஒன்று உண்டா என்ன? கொள்கையே இல்லை என்பதுதான் அவர்கள் கொள்கை. பிள்ளையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டி விடுவதுதான் அவர்கள் வழி. கர்நாடகாவில், தண்ணீர் கொடுக்காதே என்பார்கள், தமிழ்நாட்டில் தண்ணீருக்காக உண்ணாவிரதம் இருப்பார்கள். மானம் கெட்ட நிலை. என்ன செய்வது? இதுவரை வாய்மூடி மௌனியாக இருந்த நம்மூர் சில்லுண்டித் தலைவர்களெல்லாம் ஆ, ஊ வென்று கர்நாடகாவை திட்டித் தீர்க்கலாம். அப்போழுதுதானே இங்குள்ள ஆளும் கட்சிக்கு ஜால்ரா போட முடியும். இது காங்கிரசின் பச்சோந்தித் தனம்.

ஊரே பற்றி எறியும் போது நீரோ மன்னன் ஃபிடில் வாசித்தானாம். அது போல, இவ்வளவு அமர்க்களம் நடைபெற்ற போதும், ‘மௌன’ மோஹன சிங் தன் அதரங்களிலிருந்து ஒரு முத்துக் கூட உதிர்க்க வில்லை. தமிழகத்தைச் சேர்ந்த எந்த ஒரு காங்கிரஸ் மத்திய மந்திரியும் வாயைத் திறக்கவில்லை. ஒரு மத்திய அரசாங்கம் இருக்கிறது, அதற்கு முறையிடுவோம் என்று இஙகேயுள்ள ஆளும் கட்சி நினைக்கவில்லை. மாறாக, சோனியாவிற்குத்தான் கடிதம் எழுதப்பட்டுள்ளது. 10, ஜன்பத் தான் உன்மையில் நாட்டை ஆள்வது.

இந்த நிலையில் தமிழ்நாடு, கர்நாடகாவில் தேர்தல் முடிந்து ஒரு அரசாங்கம் அமையும் வரை பொருத்திருப்போம் என்று முடிவெடுத்துள்ளது, தற்போதைய நிலைக்கு ஒரு தற்காலிகமான செயல் என்றாலும், கர்நாடாகாவில் எந்த கட்சியின் அரசு வந்தாலும் அவர்கள் இதற்கு ஒப்புக் கொள்ளப் போவதில்லை. இந்தப் பிரச்சினையை ஊதி, ஊதிப் பெரிசாக்கினவரே பாஜபாவின் எதியுரப்பாதான். குமாரசாமி சத்தியமாக அரசு அமைக்கப் போவதில்லை. கிருஷ்ணாவின் நிலை தான் நன்றாக தெரியும். கூட்டாட்சி வந்தால் இன்னும் இடியாப்பச் சிக்கல்தான். அப்படியிருக்க, எப்படி வரப்போகும் அரசு இந்த விஷயத்தில் தமிழ்நாட்டுக்கு சாதகமாக முடிவெடுக்கும்.

ஆக மொத்தத்தில். இன்னுமொரு ‘காவிரி’ உருவாகிவிட்டது. ஒப்பந்தம் போட்டு 10 ஆண்டுகள். நடமுறைப் படுத்த இன்னும் எத்தனை தலை முறைகளோ? ஆனாலும், எல்லாக் கட்சிகளுக்கும் வெற்றி. தொடக்க விழாதான் கொண்டாடி ஆயிற்றே. எனவே சாதனைப் பட்டியலில் இன்னுமொரு எண்ணிக்கை அதிகரிக்கும். கர்நாடக அரசியல் கட்சிகள், தத்தம் வெற்றி என்று பறை சாற்றிக் கொள்ளும்.

வடநாட்டில் எதிர்ப்பென்றால், அங்கே ஒட்டுப் பெறுவதற்காக இங்கே சேதுக் கால்வாய்த் திட்டம் நிறுத்தப்படும். கர்நாடகாவில் தேர்தல் என்றால், ஒகனேக்கல் குடிநீர்த் திட்டம் தள்ளி வைக்கப்படும். கேரளாவில் கூச்சல் போட்டால், முல்லைப் பெரியாறு மல்லாக்கப் படுத்துவிடும். ஆந்திராவில் அமளி என்றால், கிருஷ்ணாவும் கோவிந்தாவாகி விடும்.

தேசிய நோக்கு இல்லாத இவர்களை எப்படி நாம் தேசியக் கட்சிகள் என்று கூற முடியும்? இனி வரும் தேர்தல்களில், தேசியக் கட்சிகளை ஒட்டு மொத்தமாகப் புறப்பணிப்பதுதான், நாம் இவர்களுக்குத் தரும் தண்டணையாக இருக்க வேண்டும்.

இந்திய அரசியலில் நிர்வாகமும் இல்லை, மத்திய அரசுக்கு ஆண்மையும் இல்லை.

இது என் நூறாவது பதிவு. ஆயினும் இதைப் பதியும் பொழுது எனக்கு எந்தவொரு உவகையும் இல்லை. மிகுந்த சங்கடத்துடன்தான் பதிகிறேன்.

Thursday, April 03, 2008

இந்தியாவின் கிரிக்கெட் Highlights Package

சென்னை ஆட்டத்தின் போது, சேவாகின் ஆட்டத்தை பற்றிக் கேட்ட போது, ராகுல் திராவிட் சொன்னது " அவர் ஆட்டத்தைப் பார்த்தது ஒரு Highlights Package ஐப் போல இருந்தது.

இன்று முழு இந்திய அணியும் ஆடிய ஆட்டம் இன்னுமொரு Highlights Package ஐப் போல அவ்வளவு சுருக்கமாக இருந்தது. என்னதான் இருந்தாலும்                     20-20 champion அல்லவா, அதான் 20 over லியே ஆட்டத்தை முடித்துக் கொண்டு விட்டார்கள்.

என்னடா, விடுமுறை நாளிலே 12:00 மணிக்க (saudi time) ஒரு meeting போகணுமே,  இந்திய ஆட்டத்தை முழுக்க பார்க்க முடியாதே என்றிருந்த எனக்கு அந்த குறையை வைக்காமல் செய்த இந்திய அணியினருக்கு என் நன்றி.

Tuesday, March 04, 2008

தான் விரித்த வலையிலேயே வீழ்ந்த ஆஸ்திரேலிய வீரர்கள்

தான் விரித்த வலையிலேயே வீழ்ந்த ஆஸ்திரேலிய வீரர்கள்

“Paid back with the same coin” என்கிற பழமொழி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு மிகவும் பொருந்தும். கிரிக்கெட் விளையாட்டில் “mental disintegration” என்கிற ஒரு பிரயோகத்தைக் கண்டு பிடித்தவர்கள் அவர்களே. மைதானத்தில் எதிரணி ஆடும் போது, சள சள வென்று பேசி அவர்களின் முனைப்பாட்டைக் கலைத்தும், எதிரணி வீரர்களைப் பற்றி ஏளனமாகப் பேசி அவர்களுக்கு கோபத்தை உண்டாக்கி அவர்களின் கவனத்தைத் திசை திருப்பி எளிதில் அவர்களை “out” ஆக்கியும் , மற்றும் சில கீழ்த்தரமான உத்திகளை கையாண்டும் தங்களை சிறந்த விளையாட்டு வீரர்கள் என முன்னிறுத்தி வந்தார்கள். இதை பெரிய உத்தி என்றும், தாங்கள் விளையாட்டை மிகவும் உத்வேகமாக ஆடுபவர்கள் என்றும் வேறு பீற்றிக் கொண்டார்கள்.

ஆனால், இன்று அவர்களின் இந்த உத்தியே அவர்களுக்கு குழி பறித்து விட்டது. சிட்னியில் சட்னி ஆக ஆரம்பித்தவர்களை, இன்று ப்ரிஸ்பேனில், பிரித்து காயப் போட்டுவிட்டார்கள், இந்திய வீரர்கள்.

ஆஸ்திரேலிய வீரர்கள் அடுத்தவர்களுக்கு செய்ய நினைத்த “mental disintegration”ஐ, அவர்கள் தங்களுக்குத் தாங்களே செய்து கொண்டு விட்டார்கள். ஹர்பஜன் சொல்லாத வார்த்தையை சொன்னதாக சொல்லி அசடு வழிந்தார்கள். இது அத்தனைக்கும் சிகரம் போன்றது, கும்ப்ளேயின் வர்ணணைதான் “only one team played the game in proper spirit”. இந்த ஒரு வர்ணணையில் அன்று கீழே விழுந்தவர்தான் பாண்டிங்கும் அவரது சகாக்களும், இன்று வரைக்கும் எழுந்திருக்கவேயில்லை. சள, சள வென்று பேசாமல், லொட லொட வென்று உளறாமல், ஒரே வாக்கியத்தில் ஒட்டு மொத்த குழுவையும் அடித்து போட்டதில் “mental disintegration” ஆனது ஆஸ்திரேலிய வீரர்கள் தான், இந்திய வீரர்கள் இல்லை.

மாத்யு ஹேடன், ரேடியோவில் ஹர்பஜனைப் பற்றி உளறி வைக்க, அவருக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியாவே ஆப்பு வத்தது. அக்கிளை சொறிந்தால் கூட, அங்கிளுக்கு ஜுரம் வந்தது. ஆஸ்திரேலிய மக்கள் அனைவரும் கடந்த 2 மாதமாக செய்து வந்த ஒரே பஜனை ஹர்’பஜன்’ தான். இன்று மைதானத்தில் அம்மணமாக ஓடி வந்த பார்வையாளரை அடித்து வீழ்த்திய காரணத்திற்காக, சைமாண்ட்ஸ் மீது நடவடிக்கை எடுத்தாலும் எடுக்கலாம். இனிமேல் கிரிக்கெட்டை, ஒரு விளையாட்டக ஆடுவார்கள் என எதிர் பார்ப்போம்.

இந்திய வீரர்களை அவர்களுக்கே அடையாளம் காட்டியதில் (எதிர்மறையாக விமர்சனம் செய்து), ஆஸ்திரேலிய வீரர்களுக்கும், பத்திரிக்கைகளுக்கும், பத்திரிக்கை நிருபர்களுக்கும் முக்கிய பங்குண்டு. நாம் அனைவரும் அவர்களுக்கு இதற்காக நன்றி தெரிவிக்க வேண்டும்

வெளிநாட்டில், பெருவாரியான பத்திரிக்கைகளும், ஆட்டம் பார்க்க வந்த பார்வையாளர்களும் இந்திய வீரர்களை ஏதோ காலனி ஆதிக்கம் செய்ய வந்தவர்களைப் போல பாவித்து, எதிர்த்து வந்த போதிலும், இளஞ் சிங்கங்கள், பயமறியாது, எதிரிக் கோட்டையினில் புகுந்து அடித்து வீழ்த்தி, சாகசம் செய்து விட்டார்கள்.

அவர்களுக்கு வாழ்த்துக்கள் மட்டுமல்ல, நம் அனைவரின் ஆசிகளும் உண்டு.

Wednesday, February 20, 2008

ஆண்ட்ரு சைமண்ட்ஸின் விலை 5.40 கோடிரூபாய்

தற்போது நடந்து வரும் IPLன் ஏலத்தில் ஹைதராபாத் குழுவிற்கு ஆட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரு சைமண்ட்ஸ்அமெரிக்க டாலர் 1.35 மில்லியனிற்கு (சுமார் 5.40 கோடி இந்திய ரூபாய்) ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய நிலவரப்படி சச்சின்னுக்கே 4.50 கோடி தான் விலை.


இனிமேல் ஹர்பஜன் என்ன, யார் வேண்டுமானாலும் எப்படிக் கூப்பிட்டாலும், சைமண்ட்ஸ் கோபித்துக்கொள்ள மாட்டார் :-)

வாழ்க கிரிக்கெட் சந்தை, பெருகுக சந்தை ஆடு(ம் நாயகர்)கள்

Thursday, February 07, 2008

ஓடமும் ஒரு நாள் கரையேறும்

pm02

 

இன்றைய தினமலரில் விழுப்புரம்- திண்டுக்கல் அகல ரயில் பாதை பற்றிய ஒரு செய்தியில் பதிப்பிக்கப் பட்ட படம் !!!

விபரீதத்திற்கு இட்டுச் செல்லும் விளையாட்டுகள்.

கடந்த சில வாரங்களாக விளையாட்டுத்துறையில் நடக்கின்ற சில விஷயங்கள், விபரீதத்தின் எல்லையை எட்டுகின்றன. ஹர்பஜன் சிங் விவகாரம், ஆஸ்திரேலிய இளம் கிரிக்கெட் வீரர் ஷான் டெய்ட்டின் ஓய்வு, சானியா மிர்சாவின் பெங்களூரு போட்டியிலிருந்து விலகல், முன்னாள் கால் பந்தாட்ட வீரர் மரடோனாவின் வாக்குமூலம் ஆகியவை சில உதாரணங்கள். இவற்றில் மரடோனாவைத் தவிர மற்ற மூன்றும் இளம் வீரர்கள் சம்பத்தப்பட்டவை. மூவரும் அவர்களின் விளையாட்டத்திறன் பற்றிய விவாதங்களில் இடம் பெறவில்லை. அதற்கு மாறான விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டவர்கள்.

ஹர்பஜன் சிங் விவகாரத்தில், இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரு தப்பான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விட்டது என்றே கூற வேண்டும். அவர் கூறியதாக சொல்லப்படும் "theri maa ki.." என்கிற ஏசல், "குரங்கு" வார்த்தையை விட மிக மோசமானது. 'பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்த கதையாய்' அவர் குரங்கு என்று கூற வில்லை என்பதை நிரூபிக்க, புதியதாக (அப்படித்தான் தோண்றுகிறது) ஒரு சொல்லைக் கண்டுபிடிக்கப்போய் அது 'குரங்கை' விட மிக மோசமானது என்று தோண்றாமல் போய் விட்டது போலும். ஹர்பஜன் கூறிய இந்த வார்த்தையை நியாயப்படுத்திய கிரிக்கெட் வாரியத்திற்கு, ஆஸ்திரேலிய வீரர் ஹாக் கூறிய 'bastard' என்கிற ஏசலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டன மனு கொடுக்க (பின்னர் அதை திரும்பப் பெற்றாலும்) என்ன யோக்கியதை இருக்கிறது?

ஷான் டைய்டின் நிலையைப் பாருங்கள். 24 வயதே ஆன இவர் மன உளைச்சல் மற்றும் மன அழுத்தம் காரணமாக வறையரையில்லாத காலத்திற்கு கிரிக்கெட் ஆட்டத்திலிருந்து ஓய்வு அறிவித்திருக்கிறார். உலகின் மிக அதி வேக பந்து வீச்சாளர், இப்போதுதான் உலக அரங்கில் அடி எடுத்து வைத்திருப்பவர், இந்த முடிவு எடுக்கக் காரணம்? இவரிடம் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் எதிர்பார்ப்புகள், பெர்த் விளையாட்டில் இவருடைய தனிப்பட்ட தோல்வி, தன் செயல் திறனை நிலைநிறுத்திக்கொள்ள அவர் மேற்கொண்ட முயற்சிகளால் ஏற்பட்ட அயற்சி ஆகியவை அவரை இந்த நிலைக்குத் தள்ளியுள்ளன.

சானியா மிர்சா பாவம். கடந்த சில மாதங்களாக அவருக்கு கொடுக்கப்பட்ட தொல்லைகள், யாராயிருந்தாலும் இந்த முடிவைத்தான் எடுக்கத் தூண்டியிருக்கும். அவருடைய ஆடையைப் பற்றிய மத குருமார்களின் விமர்சனங்கள், ஹைதராபாத்தில் மெக்கா மசூதியில், அவ்ரை வைத்து விளம்பரப் படம் எடுத்தவர்களை விட்டுவிட்டு அவ்ர் மேல வழக்குப் பதிவு செய்தது, மேடை அலங்காரமாக வைக்கப் பட்டிருந்த தேசியக் கொடியினெதிரில் தன் கால்களை நீட்டி உட்கார்ந்திருந்தது என்று ஏதாவது ஒரு விவகாரத்தில் அவர் பெயர் ஊடகங்களில் அடி பட்டது அவருக்கு மன உளைச்சல் கொடுத்ததால் அவர் இந்தியாவில் நடக்கும் டென்னிஸ் போட்டிகளில் இந்த வருடம் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளார்.

விளையாட்டையும், வீரர்களையும் வேறு ஒரு நிலைக்கு இட்டுச் சென்றது, அதில் கிடைக்கும் பணம்தான்.  அது வீரர்களையும், வாரியங்களையும் தன்னிலை இழக்கச் செய்கின்றது.

Saturday, January 12, 2008

உண்மையின் சரணாலயம் (The Sanctuary of Truth) பிரமிப்புகளின் தொடர்ச்சி:

உண்மையின் சரணாலயம் (The Sanctuary of Truth)

பிரமிப்புகளின் தொடர்ச்சி:

முதல் அனுபவம் ஸீபுரம் (வேலுர்) ஸீநாரயணி பீடம் பற்றிய பதிவு

இரண்டாவது பிரமிப்பு தாய்லாந்தில் நிகழ்ந்தது. இம்முறை விடுமுறையில் குடும்பத்துடன், தாய்லாந்து பயணம் மேற்கொண்டோம். அதில் ஒரு பகுதியாக பாட்டையா சென்றிருந்தோம். கிடைத்த ஒரு அரை நாள் இடைவெளியின் போது எதேச்சையாக ஹோட்டல் லாபியில் உள்ள டூர் டெஸ்க்கில் ஒரு போட்டோவைப் பார்த்தோம். உடனே அதற்கான வழியைக்கேட்டுத் தெரிந்து கொண்டு டாக்ஸி பிடித்துச் சென்றோம்.

அதைப்பற்றி ஒருவரியில் சொல்ல வேண்டுமானால் ‘மயன் மாளிகை’ என்று வர்ணித்தாலே போதும் (ஏன் அது மயனையே கூட நாணித் தலை குனிய வைத்திருக்கும்).  நம் புராதன கதைகளில் வர்ணிக்கப்பட்டது போலவும், சில தந்திரங்கள் நிறைந்த திரைப்படங்களிலும் பார்த்திருப்போமே அது போலவும் ஒர் அற்புதமான அமைப்பு அது. பார்க்க பார்க்க சலிக்காத ஒன்று. இப்படியும் ஒரு கட்டுமானம் இருக்க முடியுமா? இதுவும் மனிதனால் சாத்தியமா, இது பூமியா, இல்லை இந்திர லோகமா? என்று ஆச்சரியப்பட வைத்த ஒரு மரக் கோவில்.

உலகத்தில் உள்ள எல்லா விதமான ஆச்சரியங்களையும், அற்புதங்களையும் கலந்து ஒரு புது வடிவம் கொடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அக்கோவில்.

‘உண்மையின் சரணாலயம்’ இந்தப்பெயர் அதற்கு முற்றிலும் தகும். கலைத்திறனுக்கும், கற்பனை வளத்திற்கும் நம்மை முற்றிலும் சரணடைய வைக்கும் இடம். ஒரு பக்கம் அழகான கடற்கரை. மற்றொரு பக்கம் சற்று உயர்ந்த மரங்களடர்ந்த சோலை, இடையில் இந்த சரணாலயம். அந்தி சாயும் சூரியனின் கிரணங்களினால் குளிப்பாட்டப்பட்டு, கடல் அலைகளினால் தாலாட்டப்பட்டு, சோலைத் தென்றலால் வருடப்பட்டு, ஆகா நாம் இங்கேயே இருந்து விட மாட்டோமா, அங்கு வடித்திருக்கும் தேவர்களுடன் ஐக்கியமாகி விட மாட்டோமா என்று எண்ணத் தோண்றும்.

அப்படித் தங்கி விட்டால், புத்தருடன் புதிர் விளையாட்டு விளையாடலாம், புத்த துறவிகளுடன் வாதம் புரியலாம், கிருஷ்ணருடன் கொஞ்சி விளையாடலாம், சிவனை சீண்டிப் பார்க்கலாம், நாராயணனை நலம் விசாரிக்கலாம், பிரம்மாவிடம் பாடம் கேட்கலாம், பஞ்ச பூதங்களுடன் பல்லாங்குழி ஆடலாம், நர்த்தகிகளுடன் நடனம் புரியலாம், தேவர்களுடன் ஒடிப்பிடித்து விளையாடலாம், குதிரைகளில் ஏறி சீறிப் பாயலாம், யானைகளில் பவனி வரலாம். அப்படி, மரத்தினாலான சிற்பங்கள் ஒவ்வொன்றும், உயிருள்ளவை போலத் தோன்றும்.

சற்றுக் களைப்படைந்து கால்நீட்டி அந்த மரத்தரையில் சாய்ந்து உச்சி முகட்டைப் பார்த்தால், அந்த மரச் சிற்பங்களுக்கு உயிர் கொடுத்த அந்த சிற்பிகளின் கைகளுக்கு தங்கக் காப்பு அணிவிக்கத்தான் தோன்றும்.

DSC00513

 DSC00514 DSC00516 DSC00517 DSC00520

DSC00524 DSC00526

DSC00528 DSC00533 DSC00554DSC00551

 

கிழக்கு ஆசியாவின் மதங்களை சங்கமிக்கும் வகையில் உருவாக்கப் பட்டிருக்கிறது இக்கோவில். 1981 ல் ஆரம்பிக்கப்பட்டு வேலைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. இன்னும் 5 லிருந்து 8 வருடம் ஆகும் என்கிறார்கள், இதைக் கட்டை முடிக்க. அஸ்திவாரம் வரைக்கும்தான் இரும்பும் சிமெண்ட்டும். அதன் மேல் எழுப்பப்பட்ட கோவில் முழுவதும் முழுக்க முழுக்க மரத்தினாலேயே செதுக்கப்பட்டுள்ளன. அனைத்தும் தேக்கு மரங்கள். சிற்பங்கள் அருகிலுள்ள தொழிற்கூடத்தில் சிற்பிகளால் செதுக்கப்பட்டு பின்னர் கோவிலில் பொருத்தப்படுகின்ரன. சுமார் 100க்கும் மேற்பட்ட சிற்பிகள் வேலை செய்து வருகிறார்கள். இதற்கு கருத்து வடிவம் கொடுத்து செயல்களை ஆரம்பித்தவர் திரு. குன் லெக் என்கிற கோடீஸ்வரர். சில வருடங்களுக்கு முன் அவர் இயற்கை எய்தினாலும், கோவில் பணிகள் தடையின்றி நடந்து வருகின்றன.

இந்திய, சீன, தாய் மற்றும் கேமர் கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. நான்கு வாயில்களும் ஒவ்வொரு கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு வாயில் இந்திய, இந்து கலாச்சாரத்தையும், இன்னொரு வாயில் சீன புத்த கலாசாரத்தையும், மூன்றாவது வாயில் லாவோஸ், கம்போடியா கலாச்சாரத்தையும், பிரதான வாயில் தாய் கலாச்சாரத்தையும் அடிப்படையாக கொண்டுள்ளது.

இக்கோவிலின் முக்கிய நோக்கமே, மேற்கத்திய கலாசாரமும், தொழில் நுட்பமும் நம்மை ஆக்கிரமித்து, நம் கலாசாரத்தையும், ஆன்மீக வழிமுறைகளையும், நற்பண்புகளையும் சீரழித்து வருவதை தடுத்து, வரும் சந்ததியினருக்கு அதை உணர்த்தவே என்கிறார்கள்.

உண்மையின் சரணாலயம் இயற்கையின் ஏழு படைப்பாளிகளை பிரதிபலிக்கிறது. வெளி, பூமி, தாய், தகப்பன், சந்திரன், சூரியன் மற்றும் நட்சத்திரங்களே அவை.

மிக உயரமான மத்திய கோபுரத்தின் உயரம் 105 மீட்டர். அதன் உச்சியில் கல்கி பகவான் குதிரையின் மீது இருப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது. புத்த சமயப்படி கல்கி, புத்தரின் ஐந்தாவது கடைசி அவதாரமாம்.

ஒரு வாயிலில் தாய், தந்தையருக்கு செலுத்த வேண்டிய மரியாதையை அழகாக சிற்பங்களினால் செதுக்கியுள்ளார்கள். சயனத்தில் இருக்கும் விஷ்ணுவும், நர்த்தனம் புரியும் சிவனும், நவக்கிரக நாயகர்கள் தங்கள் வாகனங்களின் மீதிலும், கிருஷ்ணாவதார சிருங்கார காட்சிகளும், மகிஷாசுர மர்த்தினியின் சிலையும், மஹாயான போதித்துவத்தை பிரதிபலிக்கும் காட்சிகளும் மிகவும் அழகாக உள் மண்டபங்களில் செதுக்கப்பட்டுள்ளன. பிரம்மாவிற்காக ஒரு தனி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அங்குலமும், மரச் சிற்பங்களால் நிரப்பப் பட்டுள்ளது.

நாம் கற்களில் வடிக்கப்பட்ட சிலைகளை இந்தியாவில் பல இடங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் மரத்தில் இவ்வளவு தத்ரூபமாக வேறு எங்கும் வடித்ததில்லை. கைத்திறனுக்கும், கலைத்திறனுக்கும் இக்கோவில் ஒரு எடுத்துக்காட்டு. உலக அதிசயங்களில் முதன்மையான ஒன்றாக பாவிக்கப்பட வேண்டியதிற்கான அத்தனை அம்சங்களும் ஒருங்கே பொருந்திய ஒரு கலைக்கூடம்.

ஏனே தெரியவில்லை, இன்னும் இது அமைக்கப்பட்ட சுற்றுலாக்களில் (oraganized tours) இது இடம் பெறவில்லை. பாட்டையா சென்று, இதைப் பார்க்காமல் திரும்பினால், பாட்டையா சென்ற பயனே இல்லை.

முதல் அனுபவம் ஸீபுரம் (வேலுர்) ஸீநாரயணி பீடம் பற்றிய பதிவு

Thursday, January 10, 2008

இரண்டு ஆச்சரியப்பட வைக்கும் அதிசயங்கள். - முதல் அனுபவம்: ஸ்ரீபுரம் (வேலுர்), ஸ்ரீ நாராயணி திருக்கோவில்.

கடந்த மாதம் இரு சுவையான, ஆச்சரியப்பட வைக்கும் அனுபவங்கள். ஒன்று தாய் நாட்டில், மற்றொன்று தாய்லாந்தில். இரண்டு விதமான கோவில்கள், இரண்டுமே தனித்தன்மையுடன் கூடிய, கலை நயம் பொருந்திய அற்புதங்கள். ஒன்று செல்வச் செழிப்புடன் கூடிய கலைத்திறனை வெளிப்படுத்தியது. மற்றொன்று கலைத் திறனையும், கைவேலைப்பாட்டையும் மிகப் பிரமாண்டமாக வெளிப்படுத்தியது. என் அனுபவங்களை இங்கே பகிர்கிறேன்.

முதல் அனுபவம்: ஸ்ரீபுரம் (வேலுர்), ஸ்ரீ நாராயணி திருக்கோவில்.

சமீபத்தில், மிகப் பிரமாண்டமாக பேசப்பட்ட, தமிழ்நாட்டில், வேலூரிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில், ரம்மியமான இயற்கைச் சூழலில் அமைந்துள்ள பொற்கோவில். பல ஆண்டு காலமாக கட்டப்பட்டு வந்த இக்கோவில் பற்றிய யாதொரு செய்தியும், ஊடகங்களிலோ, பொது மக்களாலோ பெரிதும் பேசப்படாமலே, சென்ற செப்டம்பர் மாதம் முதல் வழிபாட்டிற்காக பொதுமக்களுக்கு திறந்து விடப்பட்டிருக்கிறது. பல நூறு கோடி செலவில் கட்டப்பட்டிருக்கும் இந்தக் கோவிலை பற்றிய செய்திகளை எப்படி அவ்வளவு ரகசியமாய் வத்திருந்தார்கள் என்பதுதான் ஆச்சரியம். கோவிலின் பிரதான வாயில் செல்லும் வரையில் அது எப்படி இருக்கும் என ஊகிக்க முடியவில்லை, ஏனென்றால் அடர்ந்த சோலைகளும், மரங்களும் அக்கோவிலை மறைத்து விடுகின்றன. பிரதான வாயில் சென்றதும்தான் அதன் பரிமாணமும், பிரமாண்டமும் தெளிவடைகின்றது. கோவில் என்னவோ சிறியதுதான் – அம்மன் வாசம் செய்யும் கர்ப்பக்கிரகம், அதன் முன்னிலையில் ஒரு சன்னிதி, மற்றும் இரண்டாம் நிலையில் இன்னொரு சன்னிதி, அவ்வளவுதான். மொத்தமே 1000-1500 சதுர அடிதான். ஆனால் அதன் அமைப்பு, சுற்றுப்புற சூழல் எல்லாம் அது என்னவோ, மிகப் பிரமாண்டமான ஒரு கோவிலைப் போல தோற்றமளிக்கச் செய்கிறது.

 

GT1

 

GT2

GT3

GT4

GT5

GT6

GT7

GT8

GT9

GT10

GT11

(கோவிலின் உள்ளே, கேமராவும் வீடியோவும் அனுமதிக்கப்படாததால், வலையில் கிடைத்த புகைப்படங்களைப் பதித்திருக்கிறேன்)

இது வரையில், தமிழ் நாட்டில், ஏன் இந்தியாவிலேயே அப்படி ஒரு சூழலில் கோவில் கட்டப்பட்டிருக்குமா என்பதே சந்தேகம்தான் ( இங்கே நான் தங்கத்தைக் குறிப்பிடவில்லை, சூழலைத்தான் குறிப்பிடுகிறேன்). கிட்டத்தட்ட 100 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது ஸ்ரீநாராயணி ஆலயம். பச்சைப்பசேலென்று பரந்து விரிந்த புல்வெளியினூடே, மிக நேர்த்தியாக அமைக்கப்பட்ட தோட்டங்களும், செயற்கையாக அமைக்கப்பட்ட 100 அடி உயரத்திலிருந்து விழும் அருவியும், கருங்கற்கலால் ஆன சிலைகளும், பின்னனியில் தெரியும் மலைகளும், நீங்கள் உள்ளே நுழைந்த உடனேயே உங்கள் மனத்தைக் கொள்ளை கொள்வது மட்டுமில்லாமல், பரவசம் அடையச் செய்கிறது.

பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்க ஒரு பெரிய கூடம் 7 தடுப்புகளாக தடுக்கப்பட்டு ஒவ்வொரு அறையிலும் சுமார் 300 அமரக்கூடிய அளவிற்கு இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் அம்மனைத் தரிசிக்க வரிசையில் அனுப்படுகிறார்கள். கோவிலின் வெளிப் பிரகாரம் ஆறுகோண நட்சத்திர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கும், மத்தியில் உள்ள கோவிலுக்கும் சுமார் 100 மீட்டர் இடைவெளி உள்ளது. இந்த இடைப்பிரதேசத்தில் புல்வெளிகளும், பூந்தோட்டங்களும் அமைக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 2 கிலோமீட்டர் நீளம் நடந்தால்தான், பொற்கோவிலை அடைய முடியும். (வயதானவர்களுக்கு சக்கர நாற்காலி வசதி உள்ளது. ஒரு சிறு தொகைக்கு அதில் கோவில் ஊழியர்களே பக்தர்களை அழைத்துசென்று தரிசனம் செய்வித்து விட்டு கொண்டு விடுகிறார்கள். அந்தப்பணமும் ஒரு தொண்டு நிறுவனத்திற்குத்தான் செல்கிறது).

இந்தப்பாதையில் சுற்றி வரும்போது, சூரியனின் கிரணங்கள் கோவிலின் தங்கக் கோபுரத்திலும், மண்டபத்திலும் பட்டு தகதகவென ஜொலிக்கிறது. கோவிலை அடைந்ததும் ஒரு வட்டமான ஒரு சிறு பிரகாரம். இந்தப்பிரகாரத்திற்கும், கர்ப்பக்கிரகத்திற்கும் இடையே ஒரு அகழி போன்ற அமைப்பு, தண்ணீரால் நிரப்பப்பட்டுள்ளது. இந்தத் தடாகத்தில் விழும் தங்கக்கோபுரத்தின் நிழலும், சூரியக்கிரணங்களின் பிரதிபலிப்பும் நம்மை சற்று நிலை தடுமாறத்தான் செய்கின்றன.

இத்தனை அருகில், அவ்வளவு தங்கத்தகடுகள் போர்த்தப்பட்ட கோபுரத்தையும் மண்டபத்தையும், தூண்களையும், சிற்பங்களையும் பார்க்கும் போது, கடவுளையும் சற்று மறந்து, ‘ஆ’வென வாயைப் பிளக்கத்தான் தோன்றுகிறது.

தரிசனம் முடிந்து வாயிலுக்குத் திரும்பும் வழியில் செயற்கை நீறுற்றுகளும் நீர் வழிகளும், கிருஷ்ணாராஜ சாகர், பிருந்தாவன் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது மாதிரி அமைக்கப்பட்டுள்ளன.

முதன்முறையாக செல்லும் போது பிரமாண்டமும், பிரமிப்பும் நம்மை முட்டுவதால், தெய்வ தரிசனத்தில் மனம் அவ்வளவு லயிக்கவில்லை. ஆனாலும் இயற்கை ததும்பும் சூழலில் சுமார் ஒண்ணரை மணி நேரம் காலார நடந்து வந்தது ஒரு புத்துணர்ச்சியையும், தெம்பையும் கொடுக்கத்தான் செய்தன. பௌர்ணமி நிலவில் இக்கோவிலின் அழகு இன்னும் பன்மடங்கு இருக்கும் என்று அங்கிருந்தவர்கள் கூறினார்கள். உண்மைதான், தன்னிலவு, தங்கக்கோவிலுக்கு இன்னும் அழகு சேர்க்கத்தான் செய்யும்.

இக்கோவில், வரும் நாட்களில், சென்னை சுற்றுப்பயண நிகழ்சிகளில் ஒரு இடம் பிடித்து விடும். கோவில் நிர்வாகமும், கூட்டத்தை சமாளிக்க பலவித முன்னேற்பாடுகள் செய்துள்ளார்கள். இக்கோவில் தமிழ்நாட்டின் திருப்பதியாக பிரகாசிக்கும்.

(பி.கு :: இவ்வளவு செலவழித்து தங்கத்தில் கோவில் தேவையா, அந்தப்பணத்தை வேறு பல விடையங்களில் செலவழித்து மக்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றிருக்கலாமே என்கிற தொனியோடு வருகிற பின்னூட்டங்களுக்கெல்லாம் நான் பதில் சொல்லப்போவதில்லை. என்னைப் பொருத்தவரையில் இது ஒரு விதமான அனுபவம், அதிசயம். பார்த்தேன், ரசித்தேன், பகிர்ந்து கொண்டேன் அவ்வளவுதான்)

இரண்டாவது அனுபவம், 10 நாட்களிலேயே தாய்லாந்தில் கிடைத்தது. அதைப் பற்றி வரும் பதிவில்.

வந்தாச்சு, வந்தாச்சு .. டாடாவின் 'நேனொ' பொது மனிதனின் ஒரு லட்சம் ரூபாய் கார்

தில்லியில் நடந்த ஆட்டோ எக்ஸ்பிஷனில், இன்று திரு ரத்தன் டாடா, டாடா நிறுவனத்தினரின் பொது மக்களின் காராகிய ஒரு லட்சம் ரூபாய் காரை அறிமுகப்படுத்தினார். இதன் பெயர் 'நேனோ'. மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்ட, இந்தக் கார் 4  அல்லது 5 பேரை ஏற்றிச்செல்ல முடியும்.

விமர்சகர்களுடைய எதிர்மறையான கருத்துக்களையும், தொழில் முறை போட்டியாளர்களின் எதிர் வாதங்களையும் (குறிப்பாக சுசுகியின்) முறியடித்து இந்த அறிமுகம் நடந்தது.  அந்த மேடையிலேயே இந்தக் காரின் விலை ரூபாய் ஒரு லட்சம் என்றும் அறிவித்தார்.

முற்றிலும் இந்தியத் தயாரிப்பான இந்தக் கார், மேலை, மற்றும் ஜப்பானிய கார் உற்பத்தியாளர்களை இந்தியாவின் பக்கம் திருப்பியிருக்கிறது.

டாடா நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள்.