Tuesday, August 21, 2007

மறுஅவதாரம் எடுப்பதற்கு அரசாங்கத்தின் அனுமதி வேண்டும்.

மறுஅவதாரம் எடுப்பதற்கு அரசாங்கத்தின் அனுமதி வேண்டும்.

என்ன தலை சுத்துதா? இது ஏதோ மடாதிபதியோ அல்லது, நாத்திகவாதியோ சொன்னது அல்ல. ஒரு அரசாங்கத்தின் மந்திரி, மறுஅவதாரம் எடுப்பதை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக எடுத்திருக்கும் முடிவுதான். எங்கே என்று கேட்கிறீர்களா? நல்லவேளை, நம் நாட்டில் இல்லை. சீனாவில்.

சரி சரி.. ஏன் இந்த சட்டம் ? திபெத்திய மதத் தலைவரான தலாய் லாமா ஒவ்வொரு முறையும், தற்போதைய வாழ்க்கை முடிந்தவுடன், மறு அவதாரம் எடுத்து மீண்டும் வருவதாக நம்பிக்கை. தற்போதைய தலாய் லாமா, தான் சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட எல்லையில் மறு அவதாரம் எடுக்க மாட்டேன் என்று அறிவித்துள்ளார். இந்நிலையில், சீன அரசாங்கம், இந்த சட்டத்தை இயற்றி, தனக்கு ஏற்புடையவரை புதிய தலாய் லாமாவாக முன்னிருத்தவே இந்த சட்டம்.

நமக்குத் தெரிந்ததெல்லாம், பிறப்புக்களை கட்டுப்படுத்துவதுதான். சஞ்சய் காந்தி செய்த கட்டாயக் கருத்தடை மாதிரி. ஆனால் சீனா இன்னும் ஒருபடி மேலே போய் மறு அவதாரத்தையும் கட்டுப்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.

இது இப்படியே போனால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்:

“புதிதாக அமலுக்கு வந்த சட்டத்தின்படி இந்த அரசாங்கம், ராமர் என்கிற கடவுளை கண்டுபிடித்து அறிவித்துள்ளது. அவர் நேற்று அரசாங்கத்துடன் நடத்திய பேச்சு வார்த்தையில், தான் ராமேஸ்வரத்தில் கட்டிய பாலத்தை, சீதையை மீட்டு இந்தியா திரும்பியவுடனே அழித்து விட்டதாகவும், இப்போது ராமர் சேது என்கிற மணற் திட்டு தாம் கட்டிய பாலம் இல்லை யென்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார். அவர் மேலும் அயோத்தியில் சர்ச்சைக்குறிய இடத்தைப் பார்த்துவிட்டு, நான் பிறந்த இடம் அது அல்லவே அல்ல. அங்கிருந்து இன்னும் 100 கி.மீ தள்ளி இப்பொழுது ஒரு பொட்டல் வெளியாயிருக்கும் இடத்தில் தான் பிறந்தேன் என்றார்.”

உங்கள் கற்பனைகளையும் தாராளமாக பின்னுட்டம் இடலாம்.

(http://www.msnbc.msn.com/id/20227400/site/newsweek/)

Saturday, August 18, 2007

சோனியா காந்தி பிரதமராகும் நாள் அதிக தூரத்திலில்லை.

சோனியா காந்தி பிரதமராகும் நாள் அதிக தூரத்திலில்லை.


காலம் கனிந்து வந்து விட்டது. அது தானாக வந்ததோ, இல்லை தடியால் அடித்து கனிய வைக்கப்பட்டதோ, தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். இடது சாரிகளால் எடுத்து வந்து கொடுக்கப்பட்டது.


அணுசக்தி ஒப்பந்தத்தில் மன்மோஹன் சிங்கும், இடது சாரிகளும் எதிரெதிர் துருவங்களில் நிற்கிறார்கள். நாக்கில் சனி பிடித்து இருவரும், ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து, "நுணலும் தன் வாயால் கெடும்" என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.


மன்மோஹன்சிங், "இடது சாரிகள் வேண்டுமானால் ஆதரவை திரும்பப் பெற்றுக்கொள்ளட்டும்" என்றும், "ஒப்பந்தத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லை" என்றும் ஆணித்தரமாக ஊடகத்திலும், மக்கள் மன்றத்திலும் கூறி விட்டார். இடது சாரிகளோ அவரின் அந்த ஆணித்தரமான பேச்சால் நிலை குலைந்து போய், "தேனிலவு முடிந்து விட்டது, இப்பொழுது கல்யாண வாழ்க்கை (என்னவோ கல்யாண வாழ்க்கை என்றாலே சண்டை மட்டும்தான் போல)" என்று ஏதோ டயலாக் விட்டிருக்கிறார்கள். ஒப்பந்த அறிக்கையை முழு விவாதத்திற்கு விட வேண்டும் என்றும், இல்லாவிட்டால் ஆதரவு திரும்பப்பெறப்படும் என்று பூச்சாண்டி காட்டியிருக்கிறார்கள்.


இந்த நிலையிலிருந்து இருவரும் கீழே வருவதற்கு தற்பொழுது சாத்தியக் கூறுகள் இல்லை என்றே தெரிகிறது. அது இருவருடைய தன்னிலைத் தன்மையை பாதிக்கும் என்பதினால் ஒரு முடிவில்லா நிலையில்தான் இருக்கும்.


இடது சாரிகளோ, ஒரு கட்சி என்ற பெயரில் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அரசாங்கமோ, மன்மோஹன் சிங் என்கிற ஒரு தனி மனிதரின் நிலையிலிருந்து வழக்காடுகிறது. அவருடைய குரலுக்கு ஆதரவாக இது வரையில் (18/8/2007 6:00 மாலை) எந்த ஒரு மந்திரியும், காங்கிரஸ் கட்சியும் குரல் கொடுக்க வில்லை. எங்கே இப்பொழுது குரல் கொடுத்தால் பின்னர் தனக்கு பாதகமாகப் போய் விடுமே என்று பயந்து இருக்கலாம்.


இந்த நிலைமையின் கடினத்தைக் குறைக்க, பிரணாப் முகர்ஜியும், சோனியா காந்தியும் களாம் இறங்கி உள்ளார்கள். மன்மோஹன் சிங் தன்னிலையிலிருந்து இறங்கி வராத பட்சத்தில், ஆட்சியை கவிழாமல் காப்பதற்கும்,  இடது சாரியை சந்தோஷப்படுத்தவும் ஒரு சமாதான உடன்படிக்கை ஏற்படலாம். அது மன்மோஹன் சிங்கின் பதவி விலகலாக அமையலாம். அந்த நேரத்தில், சோனியா காந்தி பிரதமாராக அமரலாம்.


மன்மோஹன் சிங்கை இத்தனை நாள் எதிர்த்துக் கொண்டிருந்த இடது சாரிகளுக்கு இது ஒரு வெற்றி யாகையால் அவர்களும் அணு சக்தி ஒப்பந்தத்தில் சற்று அடக்கி வாசிக்கலாம். (எப்படியிருந்தாலும் அதில் அவர்கள் பூச்சாண்டி காண்பிக்கற மாதிரி அவ்வளவு பயங்கரமான விளைவுகள் ஒன்றுமில்லை).


சோனியா மீண்டும் ஒரு பெரிய ராஜதந்திரி போல பேசப்படுவார். பிரதிபா பாட்டில் தான் காண்பிக்க வேண்டிய விஸ்வாசத்தைக் காட்டி அவருக்கு பதவிப் பிரமானம் செய்விப்பார். பா.ஜ.பாவும், மற்ற எதிர்க் (உதிரி) கட்சிகளும், சோனியா வெளி நாட்டவர் என்ற பழைய கோஷத்தைச் சொல்லி மீண்டும் கூச்சல் போடுவார்கள். அணு சக்தி ஒப்பந்தம், பழைய கதையாகிவிடும், சத்தம் போடாமல், பிரணாப் முகர்ஜி போய் கையெழுத்து போட்டுவிட்டு வந்து விடுவார்.


ஏற்கனவேதான் "மஹாராணியின் சேவையில்" (Her Majesty's Service) பல மந்திரிகள் இருக்கிறார்களே, சட்ட அமைச்சர் பரத்வாஜ் போல ( சத்தம் போடாமல் கொட்ரொச்சி வழக்கிலிருந்து, CBI க்கும் தெரியாமல் அப்பீலை வாபஸ் வாங்கினவர்). அப்பேற்பட்ட சகாக்களுடன் இத்தாலி அம்மையாரின் ஆட்சி தொடர்ந்து நடைபெறும்.



Take the Internet to Go: Yahoo!Go puts the Internet in your pocket: mail, news, photos & more.

விசித்திரமான படுக்கை நண்பர்கள் (Strange bedfellows)

விசித்திரமான படுக்கை நண்பர்கள் (Strange bedfellows)

 

மத்தியிலும், மாநிலத்திலும், நிகழும் அரசியல் காட்சிகளைக் காணும் பொழுது, இதைக்கண்டு சிரிப்பதா, இல்லை அழுவதா என்று தெரியவில்லை. நாம், பெரும்பான்மை பெற்ற ஒரு கட்சி ஆட்சியிலிருந்து, கூட்டுக்கட்சிகள் ஆட்சிக்கு வந்து, தற்பொழுது சிறுபான்மை எண்ணிக்கை உள்ள ஒரு கட்சி ஆள்வதையும் அதற்கு சில கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கும் நிலையிலும் உள்ளோம்.

 

வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கும் கட்சிகள், தாங்களே ராஜாக்கள் போலவும், ஆளும் சிறுபான்மை கட்சி தங்கள் சேவகர்கள் போல நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதாவது தாங்களே மறைமுகமாக ஆட்சி நடத்த வேண்டும் என்று விழைகிறார்கள். இடது சாரிகள், பாட்டாளி மக்கள் கட்சியினரின் தற்போதைய நடவடிக்கைகள் அவ்வாறுதான் இருக்கின்றன. ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் என்று ஏதோ தியாகம் செய்வதைப் போல் காட்டிக்கொண்டு, ஆளும் கட்சியினரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

 

இவர்கள் மந்திரி சபையில் இடம் பெற்றால், முக்கிய பிரச்சினைகள் பற்றிய விவாதங்களை மந்திரி சபைக் கூட்டங்களிலே எழுப்பலாம். ஆனால், மந்திரி சபையில் இடம் பெறாமல், எல்லா முடிவுகளையும், அரசாங்கம் சேரா அமைப்பான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டதிலும், தேநீர் விருந்திலும், தங்களுடன் அரசு கலந்தாலோசித்து எடுக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அரசாங்கத்தை விட ஒரு சக்தி வாய்ந்த அமைப்பாக தங்களை காட்டிக்கொள்ள விழைகிறார்கள்.

 

பிரதிநிதிகள் எண்ணிக்கையில் எண்கள் குறைவாக இருந்தாலும், அந்த என்ணிக்கையே பெரும்பான்மைக்கு இட்டு நிரப்பும் எண்ணிக்கையாக இருப்பதால், இவர்கள் கை ஓங்கியே இருக்கிறது. கொஞ்சம் அதிகமாகும் போது தான் "முடிவெடுக்க வேண்டிய நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது", "வேண்டுமானல் ஆதரவை விலக்கிக்கொள்ளட்டும்" என்று முதன் மந்திரியும், பிரதம மந்திரியும் அறிக்கை விடும் அளவிற்குத் தள்ளப் பட்டிருக்கிறார்கள்.

 

அரசாங்கம் செய்யும் மக்கள் நலத்திட்டங்களில் இவர்களும் குளிர் காய்ந்து கொள்கிறார்கள். அதே சமயம், மிகவும் நெருடலாக இருக்கும் திட்டங்களில் அரசுக்கு எதிர் குரல் கொடுத்து மக்களிடம் நல்ல பெயர் வாங்கவும் முனைகிறார்கள்.

 

இந்த நிலைக்குத் தள்ளப்படுவதற்கு, ஆளும் கட்சிகளே காரணம். சேரா நட்பால் விளைந்த வினையை அவர்கள் தானே அனுபவிக்க வேண்டும். தவளைக்கும், எலிக்கும் ஏற்பட்ட நட்பு போல, இந்த நட்பு எத்தனை காலத்திற்கு நீடிக்கும்? இடது சாரிகளும், காங்கிரசும் எந்த விதத்தில் உத்தமமான நண்பர்கள், பா.ஜ.பா விற்கு எதிரிகள் என்பதைத் தவிர?



Building a website is a piece of cake.
Yahoo! Small Business gives you all the tools to get online.

Sunday, August 12, 2007

செஞ்சட்டை வீரர்கள், வெறும் காகிதப் புலிகள்.

செஞ்சட்டை வீரர்கள், வெறும் காகிதப் புலிகள்.


"Politics is the art of looking for trouble, finding it whether it exists or not, diagnosing it incorrectly, and applying the wrong remedy."

 

இது இன்று நான் படித்த ஒரு மேற்கோள். செஞ்சட்டை வீரர்கள், அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய நிலையில் இன்று அடித்துள்ள "அந்தர் பல்டிக்கு", இதை விட சிறந்த ஒரு மேற்கோள் இருக்க முடியாது.

 

இது நாள் வரையில் செஞ்சட்டை வீரர்கள் பேசிய சவடால்களைப் பொறுத்திருந்த காங்கிரஸ், "பொறுத்தது போதும், பொங்கி எழு" என்று மனோகரா சிவாஜி போல, சடாரென்று திரும்பி, "உன்னாலே ஆனதைப் பார்த்துக்கோ, அணுசக்தி ஒப்பந்தம் நடந்து முடிந்த கதை" என்றதும், வாலை சுருட்டி இரண்டு கால்களுக்கும் நடுவில் வைத்துக்கொண்டு, சட்டென்று கீழ் சுருதிக்கு வந்து விட்டது.

 

"நாங்கள், பாராளுமன்றத்தில் எதிர்ப்போம் என்றுதான் கூறினோம், ஆதரவை விலக்கிக் கொள்வதாகக் கூறவில்லையே, அவர்களின் எண்ணிக்கை பாராளுமன்றத்தில் குறைவு என்று சற்று ஞாபகப்படுத்தினோம்" என்று தலைக்குத்தலை சமாளிக்கிறார்கள்.

 

இந்த விடயம் மட்டுமல்ல, சமீபத்தில் இன்னும் பல சமயங்களில், இவர்களில் நிலைப் பாடுகள் கேலிக்குள்ளாகியிருக்கின்றன. இரண்டு, மூன்று தினங்களுக்கும் முன், கருணாநிதி, மேற்கு வங்காளத்தில் இன்னும் கை ரிக்சா இழுக்கும் நிலையையும், அவர்கள் ஆளும் மாநிலங்களில் இன்னும் நிலமில்லாதவர்களுக்கு நில ஒதுக்கீடு செய்யாததையும் சுட்டிக்காட்டினார். நந்தி கிராமத்தில் துப்பாக்கி சூட்டில் பலர் இறந்து போன போது வாய் மூடி, கண், காது பொத்தி அரசாங்கம் நடத்திய இவர்கள், கம்மத்தில் சிலர் இறந்த போது காங்கிரஸ் அரசாங்கத்தை விலகக் கூறியது இன்னுமொரு உதாரணம். கேரளாவில் இவர்கள் அரசாங்கம் நடக்கிறது என்று சொல்வதே ஒரு நகைச்சுவை, அவ்வளவு உள்குத்துக்கள்.

 

இப்போது இவர்கள் கூட்டம் போடுவது, ச்சும்மா அறிக்கை விடுவதற்காக மட்டும்தான். கூட்டம் போட்டு, போராட்டங்கள் செய்வது எல்லாம் 2000த்திற்கு முன்னோடு போய் விட்டது.



Need a vacation? Get great deals to amazing places on Yahoo! Travel.

Saturday, August 11, 2007

லல்லு பிரசாத் யாதவ் நிஜமாகவே ஒரு மேனஜ்மென்ட் குருதான்

லல்லு பிரசாத் யாதவ் நிஜமாகவே ஒரு மேனஜ்மென்ட் குருதான்.

 

தன்னிலிருந்து விலகி யோசிக்கும் போதுதான் வித்தியாசமான யோசனைகளும், செயல்திறன்களும் வெளிப்படும். இதுதான் 'out of the box thinking' என்று கூறுவார்கள். லல்லு பல நேரங்களில் அவ்வாறு சிந்திக்கிறார்.

நேற்று அவர் இந்திய கிரிக்கெட் லீக் (ICL) பற்றிக் கூறியது "பல விளையாட்டு வீரர்கள் சந்தர்ப்பம் கிடைக்காமல், திறன்களை வெளிப்படுத்த முடிவதில்லை. அதேபோல் கிரிக்கெட்டும், பெரிய நகரங்களில் மட்டுமே விளையாடப் படுகிறது. ICL இந்திய ரயில்வேயின் மைதானங்களை தங்கள் போட்டிகளுக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் இரயில்வேக்கும் வருமானம் கிடைக்கும்".

அவரின் இந்த 'WIN-WIN' உத்தி பாராட்டப்பட வேண்டியதொன்று.  

  • ICLக்கு விளையாட்டு மைதானங்கள் கிடைக்கும் (BCCI மைதானங்களை தர மறுத்த நிலையில், இது நிச்சயம் உதவும்).
  • இரயில்வேக்கும் உதிரி வருமானம். (How to put excess, idle or waste capacity to use? Management strategy thinking)
  • ICL, ஸ்டார் கிரிக்கெட் வீரர்கள் என்ற நிலையிலிருந்து அடுத்தபடியான வீரர்களை நோக்கி வரும் பொழுது, பெரும் நகரங்களை விட்டு வெளிய வரத்தான் வேண்டும். பல திறமைசாலிகள் கிடைப்பார்கள் (தோனி, ஸ்ரீசாந்த், ஆர் பி சிங் போன்றவர்கள்)
  • BCCI க்கு ஒரு போட்டி உருவாகும் பொழுது, அதன் செயல் திறன் இன்னும் மேம்படும். இன்னும் கொஞ்சம்  professional ஆக இருப்பார்கள்.

இதில் சரத் பவாருக்கு check வைப்பது ஒரு எண்ணமாக இருந்தாலும், போட்டியை எதிர் கொள்வதும் ஒரு மேளாலரின் திறன். (ஒரு வேளை, லல்லு பின்னொருநாள் BCCI தலைவராக வரும்பொழுது ICLக்கு சாதகமாகவும் இருக்கும்.) ஆக எந்தவிதமாக இருந்தாலும், லல்லுவின் அறிக்கை வரவேற்கத் தக்கதே.

 



Need a vacation? Get great deals to amazing places on Yahoo! Travel.

Sunday, August 05, 2007

கிரண் பேடிக்கு 10 கேள்விகள்.

கிரண் பேடிக்கு 10 கேள்விகள்.


கிரண் பேடி தன்னுடைய பணி முதிர்ச்சி (service seniority) கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல், தன்னிலும் குறைந்த பணி முதிர்ச்சியுள்ளவவரை, தில்லி காவல் ஆணையாளாராக நியமித்தது தப்பு என்று ஒரு பெரும் கூக்குரலிட்டு, தான் வெகு நாள் விடுப்பில் செல்லப்போவதாக அறிக்கை விட்டார். ஆனால், மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டிலை சந்தித்துப் பேசி, சுமுகமாகி நேற்று வேலை திரும்பினார்.


கரன் தாப்பர், இவரை நேர்காணலுக்கு அழைத்து, அதற்கு அவரும் ஒத்துக்கொண்டு, பின்னர் தகுந்த காரணங்கள் கூறாமல், ஒதுங்கி விட்டாரென்றும், அவரிடம் தான் கேட்க விரும்பிய அந்த 10 கேள்விகளை, வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக, ஹிந்துஸ்தான் டைம்ஸில் வெளியிட்டுள்ளார்.

பேடிக்குத் தகுதியிருந்தும், அவரின் கடந்த கால வேலைத்திறன் மற்றும் பணிப் பதிவுகள் சிறப்பாகவும் இருந்திருந்தால், அவருக்கு அந்த பதவி கொடுக்காமல் போனது நீதி மறுக்கப்பட்டது மட்டுமில்லாமல், வழிமுறை தவறியதும் ஆகும். ஆனால் பேடியின் கடந்த கால ஆவணங்கள், அவரை பணியில் அவ்வளவு தலை சிறந்தவராக படம் பிடித்துக்காட்ட வில்லை என்கிறார்.

பேடியிடம் அவர் கேட்க விரும்பிய அந்த பத்துக் கேள்விகளும், அத்துடன் என் மனதிற்கு பட்ட ஒரு சில கேள்விகளும்:

1.         குறிப்பிட்ட வருடங்கள் பணியாற்றின பிறகு, வழமையாக தகுதியின் அடிப்படையில் வழங்கப்படும் இந்தியக் காவல் பதக்கம் (Indian Police Medal for Meritorious Service)  மற்றும்,  ஜனாதிபதியின், காவல் துறையில் தனித்தகுதியுடன் பணியாற்றியமைக்காக (President's Police Medal for Distinguished Service) வழங்கப்படும் பதக்கங்களும் இன்று வரையில் (35 வருட பணிகளுக்குப்பிறகும்) உங்களுக்கு வழங்கப்படவே இல்லையே, அது ஏன்?

2.       உங்கள் பதவிக்காலத்தில் இதுவரை 4 தடவை முழு பதவிக்காலத்தையும் முடிக்காமலும், 2 தடவையாவது உங்கள் பதவியை தகுந்த அனுமதியில்லாமல் (பணி புரிய மறுத்து) விட்டுச் சென்றதும் உண்டா?

3.      நீங்கள் மிஸோரத்தில் DIG யாக வேலை பார்த்தபோது, பத்திரிக்கையாளர்களுக்கு தகவல்களை கசிய விட்ட குற்றத்திற்காக, அதன் ஆளுனர் உங்களுக்கு ஒரு முறையான அதிருப்தி தாக்கீது அனுப்பியது உண்மையா?

4.       அன்றைய ஜனாதிபதி வெங்கட்ராமன், மிஸோரத்திற்கு வருகை செய்த போது, அதன் ஆளுனர், நீங்கள் அந்த வருகையை தடை செய்ய உத்தேசித்து இருப்பதை அறிந்து, உளவியல் துறைக்கு, வகைப்படுத்தப்பட்ட தகவல்களையும், பாதுகாப்பையும் கவனித்துக் கொள்ள நீங்கள் நம்பத் தகுந்தவரல்ல என்று தெரிவித்தது உங்கள் பணிப் பதிவேடுகளில் இருக்கிறது உண்மையா?

5.       நீங்கள் 41 நாட்கள் சண்டிகரில் IG ஆக பணி புரிந்தீர்கள். அப்பொழுது, அதன் நிர்வாக ஆலோசகர், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, உங்களின் பணி 'பொது மக்களின் நலத்திற்கு உகந்தது அல்ல" என்றும், உடனடியாக உங்களை சண்டிகரிலிருந்து அகற்றக் கோரியும் எழுதியது உண்மையா?

6.       சில தற்காலிக பணி நீக்க உத்தரவுகளை நீங்கள் ஆதரிக்காததால், கீழ் பணிபுரிந்த காவல் அதிகாரிகளை, நிர்வாகத்திற்கு எதிராக நடக்கச் சொல்லி தூண்டி விட்டீர்கள். பத்திரிக்கைகள், நீங்கள் கலகம் உருவாக்க முற்படுகிறீர்கள் என்றும் குற்றம் சாட்டியது.

7.       1988ல் நடந்த வழக்கறிஞ்சர்கள் வேலை நிறுத்தத்தில் நீங்கள் முக்கிய பங்கு வகித்தீர்கள். நீங்களே உங்கள் சுய சரிதத்தில் இதைப் பற்றியும் கூறியுள்ளீர்கள்.

8.       இவ்வாறாக பல குறைபாடுகளை உடைய உங்கள் பணிப் பதிவேட்டை, நீங்கள் ஒரு மெச்சத்தகுந்த பணிக்காலம் என்று கூறி அதன் ஆதாரத்திலா காவல் துறை ஆணையர் பதவிக்கு தகுதியானவர் என்று கூறுகிறீர்கள்?

9.       அவ்வாறாக இருந்தால், பின் ஏன் துணை ஆளுனர் தேஜிந்தர் கன்னா, அவருடைய முந்திய பதவிக்காலத்தில் நீங்கள் அவருடைய தனி அதிகாரியாக இருந்தும், இப்போது உங்களை அந்தப் பதவிக்கு பரிந்துரைக்க வில்லை?

10.     தற்பொழுது டாட்வால் அவர்களின் நியமனம், தகுதி மற்றும் முதிர்ச்சி அளவுகோலால் சரியானது அல்ல என்று வாதிடும் தாங்கள், தகுதித்திறனால் தங்களுக்கு கிடக்காத ஒன்றை, முதிர்ச்சியின் அடிப்படையில் கிடக்க வேண்டும் என்று வாதிடுவது எந்த விதத்தில் நியாயம்?

என் மனதில் எழுந்த கேள்விகள்:

·         இவர் 1972ல் பணி சேர்ந்தார். இது வரையில் பல பதவி உயர்வுகள், பரிசுகள் பெற்றுள்ளார். இதுவரையில் அவர் தன்னை விட பணி முதிர்ச்சியுள்ளாவர்களைத் தாண்டி உயர்வு பெறாமல் மேலே வந்துள்ளாரா?

·         இவருக்கும், இப்பொழுது நியமிக்கப்பட்டிருக்கும் டாட்வால் அவர்களுக்கும், 2 வருட  பணி முதிர்ச்சி வித்தியாசமே. உயர் பதவிகளில் இது ஒன்றும் பெரிய வித்தியாசமில்லை.

·         பேடி அந்த நேர்காணலுக்கு ஒத்துக்கொள்ளாததால் அவர் பக்கம் இருக்கும் நியாங்களையும், இந்த கேள்விகளுக்கான பதில்களையும் அறிய முடியவில்லை. அவர் பக்கம் நியாமமே இருக்கக்கூடும். ஆயினும் 3 மாத விடுப்பில் சென்று, திடீரென்று நேற்று (3 ஆகஸ்ட்) விடுப்பு விலக்கி பணியின் சேர்ந்தது மட்டும் ஏன் என்று புரியவில்லை.

ஆயினும் அவர் துணிச்சல் மிகுந்தவர். தில்லியின் ஆணையராக வந்திருந்தால், விஷமிகளை நிச்சயம் ஒரு கை பார்த்திருப்பார். ஒரு வேளை அதனால்தானோ என்னவோ அவருக்கு அந்த பதவி கொடுக்கப் படவில்லை……




Choose the right car based on your needs. Check out Yahoo! Autos new Car Finder tool.

Wednesday, August 01, 2007

இன்றைய இரு கோடுகள்

இரு கோடுகள்

அழிக்காமல் ஒரு  கோட்டை, எப்படி சின்னக் கோடாக்குவது? பக்கத்தில் ஒரு பெரிய கோட்டை வரைந்தால் அந்தப் பழைய கோடு சின்னக் கோடாகிவிடும். இது எல்லோருக்கும் மனப்பாடமான ஒரு புதிர்.

எப்படி ஒரு கோட்டை பெரியதாக்குவது? பக்கத்திலே ஒரு சின்னக் கோட்டை வரைந்தாலே போதும். இது எதிர்மறை வாதம்.

இன்றைய நடப்பிலே அரசியலில் நடப்பதும் அதுதான்.தினந்தோரும் ஒரு கீழ் நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இன்றைய அரசியல் பேச்சுக்களும் செயல்பாடுகளும். நேற்று அவர் பேசியதே நன்றாக இருந்தது என்று நாம் தினந்தோரும் நினைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம்.

எடுத்துக்காட்டாக சில பேச்சுக்கள், அறிக்கைகள்:
  • கலைஞரும், அம்மையாரும் விட்டுக்கொண்டிருக்கும் அறிக்கைகளை விட இதற்கு வேறு ஒரு முதன்மையான எடுத்துக்காட்டு இருக்க முடியாது. தினமும் காலையில் எழுந்தவுடன், பல் தேய்ப்பதற்கு முன் இன்று எப்படி எதிர் அறிக்கை விடலாம் என்றே இவர்கள் சிந்திப்பார்கள் போல் இருக்கிறது. நேற்றைய அறிக்கை சற்று பண்போடு இருந்தது என்று நினைக்கும் வகையில் இன்றைய  அறிக்கை இருக்கிறது. நாளை வரப்போகும் அறிக்கை, இன்றைய அறிக்கையை மேலான அறிக்கையாய் செய்து விடும்.
  • "எது எதற்கோ என்னை வந்து பார்த்து காரியம் சாதித்துக் கொள்பவர் என்னை இதற்கும் வந்து பார்த்திருக்கலாம்" தா. பாண்டியனைப் பற்றி கலைஞர்.
  • "இன்று 'கொஞசம்' அதிகம் ஆகிவிட்டது போலிருக்கிறது" ஜெ வைப் பற்றி.
  • "நமது நாட்டு வாக்காளர் நாலு காசு பார்க்கும் நேரம் நல்ல தேர்தல் தினம்தானே? நாட்டுத் தலைவர் தேர்தலிலே நான் நாலாறு கோடி திரட்டியதும் அந்த விதம்தானே?" ஜனாதிபதி தேர்தல் சமயம் ஜெ வைப் பற்றி.
  • வாடா, போடா என்று நிருபரிடம்.
  • "குடித்துவிட்டு சட்டசபைக்கு வருகிறார்கள்" ஜெ, விஜயகாந்தைப் பற்றி.
  • தினமும் கருணாநிதியை திட்டித் திட்டி ஜெ விடும் அறிக்கை.
  • ராஜசேகர ரெட்டி, சந்திரபாபு நாயுடுவைப் பார்த்து நாக்கூசும் அளவுக்கு சட்ட சபையில் பேசிய பேச்சு
  • செங்கொடிகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். நந்திகிராமத்தில் துப்பாக்கி சூடு நடந்தால் அது ஒன்றுமேயில்லை. கம்மத்தில் துப்பாக்கி சூடு நடந்தால் அரசு பதவி விலக வேண்டும். மானங்கெட்டத் தனமான பொழப்பு.
  • கர்நாடகா குமாரசாமி அதற்கு மேலே. ஹனிஃப் வீட்டிற்கே போய் ஏதோ ஒரு தியாகியைப் பார்ப்பது போல பார்க்கிறார். அவருக்கு அரசாங்க ஆஸ்பத்திரியிலே வேலைக்கு உத்தரவாதம் அளிக்கிறார், ஏதோ ஹனிஃப் சோத்துக்கே சிரமப்படுவது போலவும், அவர் குடும்பத்துக்கு உதவி செய்வதுதான் நாட்டில் முதல் பிரச்சினை போலவும்.
  • பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி இன்னும் ஒரு படி மேலே போய், சஞ்சய் தத்தை விடுதலை செய்வதுதான் முறையானது என்றும் அவர் குற்றமற்றவர் என்றும் அறிக்கை விடுகிறார், ஒரு நீதி மன்றத்தால் தெள்ளத் தெளிவாக காரிய காரணமெல்லாம் காட்டி குற்றம் சாட்டப்பட்டவரை, எப்படி ஒரு மத்திய மந்திரி பதவியில இருப்பவர் இப்படி ஆதரிக்க முடிகிறது? அரசியலில் எந்த நிலைக்கும் தாழ்ந்து போகலாம் என்று காட்ட இவர் உதாரணம்.
இவை அனைத்தும் அரசியலில் விமரிசனத்தை தாங்கிக் கொள்ள முடியாத நிலைக்கு தலைவர்கள் வந்து விட்டதையும், தரம், கண்ணியம், கட்டுப்பாடு போன்றவை காற்றிலே பறக்க விடப்பட்டதையும்தான் காட்டுகின்றன.



Need a vacation? Get great deals to amazing places on Yahoo! Travel.