Thursday, February 07, 2008

விபரீதத்திற்கு இட்டுச் செல்லும் விளையாட்டுகள்.

கடந்த சில வாரங்களாக விளையாட்டுத்துறையில் நடக்கின்ற சில விஷயங்கள், விபரீதத்தின் எல்லையை எட்டுகின்றன. ஹர்பஜன் சிங் விவகாரம், ஆஸ்திரேலிய இளம் கிரிக்கெட் வீரர் ஷான் டெய்ட்டின் ஓய்வு, சானியா மிர்சாவின் பெங்களூரு போட்டியிலிருந்து விலகல், முன்னாள் கால் பந்தாட்ட வீரர் மரடோனாவின் வாக்குமூலம் ஆகியவை சில உதாரணங்கள். இவற்றில் மரடோனாவைத் தவிர மற்ற மூன்றும் இளம் வீரர்கள் சம்பத்தப்பட்டவை. மூவரும் அவர்களின் விளையாட்டத்திறன் பற்றிய விவாதங்களில் இடம் பெறவில்லை. அதற்கு மாறான விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டவர்கள்.

ஹர்பஜன் சிங் விவகாரத்தில், இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரு தப்பான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விட்டது என்றே கூற வேண்டும். அவர் கூறியதாக சொல்லப்படும் "theri maa ki.." என்கிற ஏசல், "குரங்கு" வார்த்தையை விட மிக மோசமானது. 'பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்த கதையாய்' அவர் குரங்கு என்று கூற வில்லை என்பதை நிரூபிக்க, புதியதாக (அப்படித்தான் தோண்றுகிறது) ஒரு சொல்லைக் கண்டுபிடிக்கப்போய் அது 'குரங்கை' விட மிக மோசமானது என்று தோண்றாமல் போய் விட்டது போலும். ஹர்பஜன் கூறிய இந்த வார்த்தையை நியாயப்படுத்திய கிரிக்கெட் வாரியத்திற்கு, ஆஸ்திரேலிய வீரர் ஹாக் கூறிய 'bastard' என்கிற ஏசலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டன மனு கொடுக்க (பின்னர் அதை திரும்பப் பெற்றாலும்) என்ன யோக்கியதை இருக்கிறது?

ஷான் டைய்டின் நிலையைப் பாருங்கள். 24 வயதே ஆன இவர் மன உளைச்சல் மற்றும் மன அழுத்தம் காரணமாக வறையரையில்லாத காலத்திற்கு கிரிக்கெட் ஆட்டத்திலிருந்து ஓய்வு அறிவித்திருக்கிறார். உலகின் மிக அதி வேக பந்து வீச்சாளர், இப்போதுதான் உலக அரங்கில் அடி எடுத்து வைத்திருப்பவர், இந்த முடிவு எடுக்கக் காரணம்? இவரிடம் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் எதிர்பார்ப்புகள், பெர்த் விளையாட்டில் இவருடைய தனிப்பட்ட தோல்வி, தன் செயல் திறனை நிலைநிறுத்திக்கொள்ள அவர் மேற்கொண்ட முயற்சிகளால் ஏற்பட்ட அயற்சி ஆகியவை அவரை இந்த நிலைக்குத் தள்ளியுள்ளன.

சானியா மிர்சா பாவம். கடந்த சில மாதங்களாக அவருக்கு கொடுக்கப்பட்ட தொல்லைகள், யாராயிருந்தாலும் இந்த முடிவைத்தான் எடுக்கத் தூண்டியிருக்கும். அவருடைய ஆடையைப் பற்றிய மத குருமார்களின் விமர்சனங்கள், ஹைதராபாத்தில் மெக்கா மசூதியில், அவ்ரை வைத்து விளம்பரப் படம் எடுத்தவர்களை விட்டுவிட்டு அவ்ர் மேல வழக்குப் பதிவு செய்தது, மேடை அலங்காரமாக வைக்கப் பட்டிருந்த தேசியக் கொடியினெதிரில் தன் கால்களை நீட்டி உட்கார்ந்திருந்தது என்று ஏதாவது ஒரு விவகாரத்தில் அவர் பெயர் ஊடகங்களில் அடி பட்டது அவருக்கு மன உளைச்சல் கொடுத்ததால் அவர் இந்தியாவில் நடக்கும் டென்னிஸ் போட்டிகளில் இந்த வருடம் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளார்.

விளையாட்டையும், வீரர்களையும் வேறு ஒரு நிலைக்கு இட்டுச் சென்றது, அதில் கிடைக்கும் பணம்தான்.  அது வீரர்களையும், வாரியங்களையும் தன்னிலை இழக்கச் செய்கின்றது.

No comments: