Thursday, January 10, 2008

இரண்டு ஆச்சரியப்பட வைக்கும் அதிசயங்கள். - முதல் அனுபவம்: ஸ்ரீபுரம் (வேலுர்), ஸ்ரீ நாராயணி திருக்கோவில்.

கடந்த மாதம் இரு சுவையான, ஆச்சரியப்பட வைக்கும் அனுபவங்கள். ஒன்று தாய் நாட்டில், மற்றொன்று தாய்லாந்தில். இரண்டு விதமான கோவில்கள், இரண்டுமே தனித்தன்மையுடன் கூடிய, கலை நயம் பொருந்திய அற்புதங்கள். ஒன்று செல்வச் செழிப்புடன் கூடிய கலைத்திறனை வெளிப்படுத்தியது. மற்றொன்று கலைத் திறனையும், கைவேலைப்பாட்டையும் மிகப் பிரமாண்டமாக வெளிப்படுத்தியது. என் அனுபவங்களை இங்கே பகிர்கிறேன்.

முதல் அனுபவம்: ஸ்ரீபுரம் (வேலுர்), ஸ்ரீ நாராயணி திருக்கோவில்.

சமீபத்தில், மிகப் பிரமாண்டமாக பேசப்பட்ட, தமிழ்நாட்டில், வேலூரிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில், ரம்மியமான இயற்கைச் சூழலில் அமைந்துள்ள பொற்கோவில். பல ஆண்டு காலமாக கட்டப்பட்டு வந்த இக்கோவில் பற்றிய யாதொரு செய்தியும், ஊடகங்களிலோ, பொது மக்களாலோ பெரிதும் பேசப்படாமலே, சென்ற செப்டம்பர் மாதம் முதல் வழிபாட்டிற்காக பொதுமக்களுக்கு திறந்து விடப்பட்டிருக்கிறது. பல நூறு கோடி செலவில் கட்டப்பட்டிருக்கும் இந்தக் கோவிலை பற்றிய செய்திகளை எப்படி அவ்வளவு ரகசியமாய் வத்திருந்தார்கள் என்பதுதான் ஆச்சரியம். கோவிலின் பிரதான வாயில் செல்லும் வரையில் அது எப்படி இருக்கும் என ஊகிக்க முடியவில்லை, ஏனென்றால் அடர்ந்த சோலைகளும், மரங்களும் அக்கோவிலை மறைத்து விடுகின்றன. பிரதான வாயில் சென்றதும்தான் அதன் பரிமாணமும், பிரமாண்டமும் தெளிவடைகின்றது. கோவில் என்னவோ சிறியதுதான் – அம்மன் வாசம் செய்யும் கர்ப்பக்கிரகம், அதன் முன்னிலையில் ஒரு சன்னிதி, மற்றும் இரண்டாம் நிலையில் இன்னொரு சன்னிதி, அவ்வளவுதான். மொத்தமே 1000-1500 சதுர அடிதான். ஆனால் அதன் அமைப்பு, சுற்றுப்புற சூழல் எல்லாம் அது என்னவோ, மிகப் பிரமாண்டமான ஒரு கோவிலைப் போல தோற்றமளிக்கச் செய்கிறது.

 

GT1

 

GT2

GT3

GT4

GT5

GT6

GT7

GT8

GT9

GT10

GT11

(கோவிலின் உள்ளே, கேமராவும் வீடியோவும் அனுமதிக்கப்படாததால், வலையில் கிடைத்த புகைப்படங்களைப் பதித்திருக்கிறேன்)

இது வரையில், தமிழ் நாட்டில், ஏன் இந்தியாவிலேயே அப்படி ஒரு சூழலில் கோவில் கட்டப்பட்டிருக்குமா என்பதே சந்தேகம்தான் ( இங்கே நான் தங்கத்தைக் குறிப்பிடவில்லை, சூழலைத்தான் குறிப்பிடுகிறேன்). கிட்டத்தட்ட 100 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது ஸ்ரீநாராயணி ஆலயம். பச்சைப்பசேலென்று பரந்து விரிந்த புல்வெளியினூடே, மிக நேர்த்தியாக அமைக்கப்பட்ட தோட்டங்களும், செயற்கையாக அமைக்கப்பட்ட 100 அடி உயரத்திலிருந்து விழும் அருவியும், கருங்கற்கலால் ஆன சிலைகளும், பின்னனியில் தெரியும் மலைகளும், நீங்கள் உள்ளே நுழைந்த உடனேயே உங்கள் மனத்தைக் கொள்ளை கொள்வது மட்டுமில்லாமல், பரவசம் அடையச் செய்கிறது.

பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்க ஒரு பெரிய கூடம் 7 தடுப்புகளாக தடுக்கப்பட்டு ஒவ்வொரு அறையிலும் சுமார் 300 அமரக்கூடிய அளவிற்கு இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் அம்மனைத் தரிசிக்க வரிசையில் அனுப்படுகிறார்கள். கோவிலின் வெளிப் பிரகாரம் ஆறுகோண நட்சத்திர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கும், மத்தியில் உள்ள கோவிலுக்கும் சுமார் 100 மீட்டர் இடைவெளி உள்ளது. இந்த இடைப்பிரதேசத்தில் புல்வெளிகளும், பூந்தோட்டங்களும் அமைக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 2 கிலோமீட்டர் நீளம் நடந்தால்தான், பொற்கோவிலை அடைய முடியும். (வயதானவர்களுக்கு சக்கர நாற்காலி வசதி உள்ளது. ஒரு சிறு தொகைக்கு அதில் கோவில் ஊழியர்களே பக்தர்களை அழைத்துசென்று தரிசனம் செய்வித்து விட்டு கொண்டு விடுகிறார்கள். அந்தப்பணமும் ஒரு தொண்டு நிறுவனத்திற்குத்தான் செல்கிறது).

இந்தப்பாதையில் சுற்றி வரும்போது, சூரியனின் கிரணங்கள் கோவிலின் தங்கக் கோபுரத்திலும், மண்டபத்திலும் பட்டு தகதகவென ஜொலிக்கிறது. கோவிலை அடைந்ததும் ஒரு வட்டமான ஒரு சிறு பிரகாரம். இந்தப்பிரகாரத்திற்கும், கர்ப்பக்கிரகத்திற்கும் இடையே ஒரு அகழி போன்ற அமைப்பு, தண்ணீரால் நிரப்பப்பட்டுள்ளது. இந்தத் தடாகத்தில் விழும் தங்கக்கோபுரத்தின் நிழலும், சூரியக்கிரணங்களின் பிரதிபலிப்பும் நம்மை சற்று நிலை தடுமாறத்தான் செய்கின்றன.

இத்தனை அருகில், அவ்வளவு தங்கத்தகடுகள் போர்த்தப்பட்ட கோபுரத்தையும் மண்டபத்தையும், தூண்களையும், சிற்பங்களையும் பார்க்கும் போது, கடவுளையும் சற்று மறந்து, ‘ஆ’வென வாயைப் பிளக்கத்தான் தோன்றுகிறது.

தரிசனம் முடிந்து வாயிலுக்குத் திரும்பும் வழியில் செயற்கை நீறுற்றுகளும் நீர் வழிகளும், கிருஷ்ணாராஜ சாகர், பிருந்தாவன் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது மாதிரி அமைக்கப்பட்டுள்ளன.

முதன்முறையாக செல்லும் போது பிரமாண்டமும், பிரமிப்பும் நம்மை முட்டுவதால், தெய்வ தரிசனத்தில் மனம் அவ்வளவு லயிக்கவில்லை. ஆனாலும் இயற்கை ததும்பும் சூழலில் சுமார் ஒண்ணரை மணி நேரம் காலார நடந்து வந்தது ஒரு புத்துணர்ச்சியையும், தெம்பையும் கொடுக்கத்தான் செய்தன. பௌர்ணமி நிலவில் இக்கோவிலின் அழகு இன்னும் பன்மடங்கு இருக்கும் என்று அங்கிருந்தவர்கள் கூறினார்கள். உண்மைதான், தன்னிலவு, தங்கக்கோவிலுக்கு இன்னும் அழகு சேர்க்கத்தான் செய்யும்.

இக்கோவில், வரும் நாட்களில், சென்னை சுற்றுப்பயண நிகழ்சிகளில் ஒரு இடம் பிடித்து விடும். கோவில் நிர்வாகமும், கூட்டத்தை சமாளிக்க பலவித முன்னேற்பாடுகள் செய்துள்ளார்கள். இக்கோவில் தமிழ்நாட்டின் திருப்பதியாக பிரகாசிக்கும்.

(பி.கு :: இவ்வளவு செலவழித்து தங்கத்தில் கோவில் தேவையா, அந்தப்பணத்தை வேறு பல விடையங்களில் செலவழித்து மக்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றிருக்கலாமே என்கிற தொனியோடு வருகிற பின்னூட்டங்களுக்கெல்லாம் நான் பதில் சொல்லப்போவதில்லை. என்னைப் பொருத்தவரையில் இது ஒரு விதமான அனுபவம், அதிசயம். பார்த்தேன், ரசித்தேன், பகிர்ந்து கொண்டேன் அவ்வளவுதான்)

இரண்டாவது அனுபவம், 10 நாட்களிலேயே தாய்லாந்தில் கிடைத்தது. அதைப் பற்றி வரும் பதிவில்.

No comments: