Thursday, February 08, 2007

அந்த நாளும் வந்திடாதோ - நடக்கும் சண்டையை கண்டு பயந்த ஒரு கிளியின் ஏக்கக் குரல்

ஓர் அடர்ந்த பெருங்காடு. அதிலே ஒரு ஆலமரம். அதன் கிளை ஒன்றிலே, தன் துணையை காணாத ஏக்கத்தில் ஒரு கிளி. சோடிக்கிளி கடந்த ஒரு வாரமாக கன்ணில் படவில்லை.

சோடி இல்லாத ஏக்கம் அந்த கிளிக்கு மட்டும்தானா? குயில், குருவி மற்ற பறவைகள் அனைத்துமே தத்தம் சோடியையோ, சுற்றத்தையோ காணாமல் மருண்ட பார்வைகளுடன், முகத்தில் ஏக்கத்துடன், படபடவென சிறகுகளை, அதிக சத்தம் வராமல் பயத்துடன் அடித்து கொண்டிருந்தன. ஏன் இந்த பயமும், பிரிவும்? அந்த காட்டில் நடந்து கொண்டிருக்கிற பெரிய யுத்தம்தான். ஒரு வயதான சிங்கத்துக்கும், பல இளவயதுடைய சிங்கங்கள், புலிகள், சிறுத்தைகள், நரிகள், ஓநாய்கள் போன்ற பல மிருகங்களுக்கும் நடக்கும் யுத்தம்தான்.

சற்றே வயதான ஒரு சிங்கம் நன்றாகத்தான் தன் ராஜாங்கத்தை நடத்திக் கொண்டு வந்தது. ஆனாலும் அவ்வப்பொழுது காட்டில் உள்ள மற்ற மிருகங்களுடன் சிறு தகராறுகள், வம்புகள் பண்ணிக்கொண்டிருக்கும். அவ்வாறு செய்வது அந்த சிங்கம் மட்டுமல்ல, எல்லா மிருகங்களுமே.

இருந்தாலும் ஒரு குள்ள நரிக்கு, இந்த சிங்கத்தை கண்டால் ஆகாது. எனவே சிங்கத்தின் வீட்டிற்கு போய் அசிங்கம் செய்து விட்டு வந்து விடும். அது போலவே யார் யார் சிங்கத்தின் வீட்டிற்கு சென்றார்களோ அவர்கள் வீட்டிலும் போய் அசிங்கம் செய்து விடும்.

இதை கண்டுபிடிக்க சிங்கம் தந்திரமாக மாறு வேடம் போட்டுக்கொண்டு தனக்குத் தெரிந்தவர்கள் வீட்டிற்கெல்லாம் போய் சாதாரணமாய் பேசியும், சண்டை போட்டு விட்டும் வந்தது. இந்த ஆட்டத்தில் குஷி கண்ட சிங்கம், தன் நண்பர்களையும் மாறு வேடத்தில் வரச் சொல்லி அழைப்பு விடுத்தது. அப்படியே தன் சுய ரூபத்திலும் மற்ற மிருகங்களுடன் உறவாடி, அவர்களுடன் சேர்ந்து உலாவல் போய் வருவது, சாப்பிடுவது என்று இருந்தது. ஒரு சமயம் புல்லும் சாப்பிட்டது. இடையில் மற்ற சிங்கங்களுக்கும், நாம் இனிமேல் நம்மை சிங்க ராஜா என்றே கூப்பிட்டுக்கொள்வோம், என்று உபதேசம் வேறு செய்தது.

அந்த சமயத்தில்தான் ஒரு நாள், தான் மாறு வேடத்தில் இருப்பதை மறந்து சொந்தக் குரலில் ஒரு வீட்டில் கர்ஜித்து விட்டது. அப்போதுதான் மற்ற மிருகங்களுக்கு, சிங்கம் மாறு வேடத்தில் வந்தது, தம்முடன் சண்டை போட்டது எல்லாம் தெரிய வந்தது.

அந்த மிருகங்கள் மிகக் கோபம் கொண்டன. தாங்கள் ஏமாற்றப்பட்டது, பொய் முகத்துடன் வந்து சண்டை போட்டது, தன்னை ராஜா என்று கூறிக் கொண்டது போன்றவை மற்றும் முற்காலத்தில் போட்ட வம்புகள் எல்லாவற்றிற்கும் சேர்த்து அந்த சிங்கத்திற்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று முடிவெடுத்தன. எல்லா மிருகங்களும் சிங்கத்தின் வீட்டிற்கு சென்றும், தத்தம் வீட்டு வாசலில் நின்று கொண்டும், பக்கத்து வீட்டு வாசலில் நின்று கொண்டும், கர்ஜித்தும், ஊளையிட்டும், ஒப்பாரி வைத்தும் கூச்சல் போட்டன. இதில் சில மான்களும், முயல்களும் கூட சேர்ந்து கொண்டன. அவைகளும் தங்களுக்கு சிங்கம் இழைத்த அநீதியை கண்டித்தன. சிங்கத்திற்கு ஆதரவாகவும் சில மிருகங்கள் குரலிட்டன. சிங்கமும் தான் செய்தது சரிதான் என்றும், மாறு வேடத்தில் வர தனக்கு உரிமை உள்ளது என்று வாதாடிற்று. யானை வந்து சமாதானம் செய்ய முயற்சியெடுத்தாலும், அதையும் ஒதுக்கித்தள்ளின. இந்த வாதம், எதிர்வாதம் பெரிய சண்டையாக மாறி எல்லா மிருகங்களும் ஒன்று சேர்ந்து சிங்கத்தை knock-out செய்ய நினைத்தன. இதனால், காட்டில் ஒரே அமளி, துமளி, புழுதிப் புயல், சத்தம்.

ஒன்றும் அறியாத பறவைகளும், முயல்களும், மான்களும், தான் ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்த இந்த அழகான காடு இவ்வாறு போச்சே. இத்தனை காலமாக நமக்கு நிழல் தந்த மரங்கள் முறிந்தனவே, நீர், நிலைகள் குழம்பிப் போயினவே என்று பயந்து காட்டிற்கு வரவே நடுங்கி, திக்கிற்கு ஒன்றாக ஓடின.

இந்த சண்டையை காட்டிலாகா அதிகாரிகளும் சும்மனே கைகட்டி வாய் பொத்தி பார்த்துக் கோண்டிருக்கிறார்கள். அவர்களும் இதை ஒரு முடிவுக்கு கொண்டு வரக் காணோம்.

சண்டை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சிங்கம் மாண்டு போய் விடுமா, இல்லை மீண்டு வருமா, எல்லா மிருகங்களும் மீண்டும் ஒற்றுமையோடு வலம் வருவார்களா, நாம் நம் சோடிகளுடன் கைகோர்த்து ஆடிப்பாட முடியுமா என்று பறவைகளும், முயல்களும், மான்களும் ஏங்கி கொண்டிருக்கின்றன.

1 comment:

சிறுதுளி said...

அண்ணன் பாலா அவர்களுக்கு.....யார் சிங்கம் ?யார் நரி?யார் மான்கள் என்று எனக்கு mail panavum...........abcdedward@gmail.com