Tuesday, May 27, 2008

பிணம் தின்னும் கழுகுகள்

பிணம் தின்னும் கழுகுகள்
தில்லி, நொய்டா சிறுமி கொலை வழக்கில், ஊடகங்களின், குறிப்பாக தொலைக்காட்சிகளின் போக்கு மிகவும் அநாகரிகமானது. எள்ளளவு கூட மனதாபிமானம் இல்லாமல், அச்செய்தியை கூறு போட்டு, கூப்பாடு கூவி விற்று, தங்களின் ‘Air time’ நிரப்பிக் கொண்டதுமில்லாமல், ‘TRP rating’கை உயர்த்தவும் உபயோகப்படுத்திக் கொண்டது. தொலைக்காட்சிகள், வேட்டை நாய் போல் தேடித் தேடி, துருவித் துருவி, தெருவில் போவோர் வருவோர் அனைவரையும் பேட்டி கண்டு, , காவல் துறையினரை ஒரு முனைப்போடு செயல் பட முடியாமல் வைத்து விட்டன.

காவல் துறை வழக்கில் கவனம் செலுத்தாமல், பேட்டி கொடுப்பதிலும், அறிக்கை விடுவதிலும்தான் அதிக கவனம் செலுத்தியுள்ளார்கள். வழக்கு ஆரம்பித்த இரண்டாவது நாளிலேயே காவல் துறை அதிகாரி மாற்றப்படுகிறார். இத்தனைக்கும் அவர் செய்தது என்ன? ஃபாரன்ஸிக் அறிக்கை வந்த பிறகுதான் திட்ட வட்டமாக எதுவும் கூற முடியும். அதற்கு ஓரிறு வாரங்கள் ஆகலாம் என்றார். அதில் ஒன்றும் தவறில்லையே? முறையாக ஒரு வழக்கை நடத்தினால்தான் அதில் தவறின்றி முடிவெடுக்க முடியும். இவ்வளவு உணர்ச்சி பூர்வமான ஒரு வழக்கை எடுத்தோம், கவிழ்த்தோம் என்று நடத்த முடியுமா?

அவருக்குப் பின் பொறுப்பேற்ற காவல் துறை அதிகாரி என்ன பேட்டி கொடுக்கிறார்? அந்த சிறுமியும், வீட்டில் உதவியாளாராக இருந்தவரும் இருந்த நிலை கண்டிக்கத் தக்கதாக (‘objectionable’) இருந்ததாகவும், ஆனால் அதே சமயம், அவர்கள் தன்னிலை (compromising) தவறி இல்லை என்றும் பேட்டி கொடுக்கிறார். இவர் என்ன திரைக்கதை வசனகர்த்தாவா, கதை எழுத? இந்த வார்த்தைகளின் விளைவுகள் தெரியாமல் பிரயோகப்படுத்தலாமா? அதுவும் SSP போன்ற உயர் பதவியில் இருப்பவர்கள்? இவர்கள் பேட்டி கொடுக்கும் நேரத்தை வழக்கில் செலுத்தியிருந்தால், சிறுமியின் மரணத்திற்கான காரண, காரியங்களைக் கண்டு பிடித்திருக்கலாம்.

ஊடகங்கள் இச்சம்பவத்தை ஒரு “கௌரவக் கொலை (Honor killing)” என ஒரு புது அடைமொழி கொடுத்து வர்ணிக்கின்றன. ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானில் ஒன்று அறியாத பலரை தவறுதலாகக் கொன்றதற்கு, அமெரிக்கர்கள் கூறிய “collataeral damage” என்கிற வர்ணணை போல, சிறிதும் ஈவு இரக்கமின்றி எப்படி இவர்களால் இப்படிக் கூறமுடிகின்றது. இவர்களுக்கு, குடும்பம், குழந்தைகள் இல்லையா? வேறு கிரகத்திலிருந்து வந்தவர்களா?
காவல்துறையினர் கூறும் ஒரு முக்கிய தடையம் என்ன தெரியுமா? ஹரித்துவாரில், ஈமக் கிரியை நடத்தும் இடத்தில், சிறுமியின் அப்பா, மரணம் இரவு 2 மணிக்கு நடந்ததாக பதிவு செய்துள்ளாராம். ஆனால் விசாரணையின் போது காலை 6 மணிக்குத்தான் தனக்கு மரணம் பற்றி தெரியும் என்றாராம். சம்பவம் நடந்த நேரமும், தெரிந்த நேரமும் வித்தியாசமாக இருக்கலாமே? இதில் என்ன தடையம் கிடைத்திருக்கக்கூடும். இந்த விதமான கோமாளித்தனமான விதத்தில் தான் விசாரணை செல்கிறது.

போதாதற்கு, உடன் பணி புரியும் பெண் மருத்துவருடன் தகாத உறவு என்று ஒரு குற்றச் சாட்டு. இனி அலுவலகத்தில் பணி புரியும் அனைவரும் கூடுமான வரை எதிர் பாலர் இல்லாத அலுவலகத்தில் தான் பணி செய்ய வேண்டும். நம் போதாத காலம், ஏதேனும் சம்பவம் நடந்து விட்டால், இது மாதிரிதான் நம் மானமும் பறிபோகும். தமிழகக் காவல்துறை கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் இருந்து கஞ்சா எடுப்பதைப்போல, இந்த தகாத உறவு, வடக்கத்திய பாணி போலும்.

இதில் முக்கியமாக இந்த சிறுமியின் மானத்தை விலை போட்ட இந்த தொலைக்காட்சிகளும், காவல் துறையும், துச்சாதனனை விடக் கொடியவர்கள். ஊடகங்கள், பிணம் கேட்பாரற்றுக் கிடந்தால் எப்படி கழுகுகளும், வல்லூறுகளும் அதை கொத்திக் கிளறி பிண்டத்தை வாறி இறைக்குமோ, அப்படி பால் வடியும் முகம் கொண்ட சிறுமியை, பச்சிளம் மாறாத ஒரு குழந்தையை சின்னா பின்னப் படுத்தி விட்டார்கள். இதில் என்ன கொடுமை என்றால் இவர்கள் அனைவரும், தத்தம் தொழிலில், நன்கு படித்து, அனுபவம் பெற்றவர்கள். செய்தியை மக்களுக்கு எப்படி அளிக்க வேண்டும் என்று அறிந்தவர்கள். ஒரு துர்மரணச் செய்தியை எப்படி வியாபாரமாக மாற்றினார்கள் என்றுதான் தெரியவில்லை.

இதில் என்ன ஒரு அலங்கோலம் என்றால், 25ம் தேதி ஊடகங்களின் முக்கிய செய்தி கர்நாடக தேர்தல் நிலவரம் ஆகும். கல்யாணப் பந்தி முடிந்து எச்சில் இலைகள் குப்பைத்தொட்டியில் விழும் போது எப்படி தெரு நாய்கள், பக்கத்து தொட்டியிலிருந்து அடித்து, பிடித்து இன்னொரு குப்பைத் தொட்டிக்குத் தாவுமோ அப்படித் தாவி தேர்தல் செய்திகளுக்கு முதலிடம் கொடுத்தனர். கேட்டால் இதுதான் இதழியல் (journalism) என்பார்கள், வெட்கம் கெட்டவர்கள்.

இந்நிகழ்வுகளில், பாரட்டப்பட வேண்டியவர்கள் மத்திய மந்திரி திருமதி ரேணுகா சவுத்திரியும் மற்றும் சில அரசு சாரா அமைப்புகளும்தான். ஒரு சிறுமியை தவறாக சித்தரித்து களங்கப்படுத்தியதற்காகவும், அவர் பெயரைக் கூறி அடையாளத்தை வெளிப்படுத்தியதற்காகவும் juvenile சட்டங்களின் படி காவல் துறையினர்மீது நடவடிக்கை எடுக்கப் போவதாகக் கூறியுள்ளனர். அவர்கள் தொலக்காட்சிகளின் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1 comment:

Anonymous said...

நெத்தி அடி நண்பரே .... ஆனால் இது எல்லாம் அவர்களுக்கு தெரிந்தால் எப்படி தொழில் நடத்துவது