மாற்றங்கள்தான் ஒரு மனிதனை, சமுதாயத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்கிறது. மாற்றங்கள் இல்லையெனில் நாம் இன்னும் கற்காலத்தில்தான் இருப்போம்.
பல நேரங்களில், மாற்றங்கள் நம்மீது திணிக்கப்படுகின்றன. இது காலத்தின் கட்டாயம். நாம்தான் சுதேசி இயக்கம் என்று கூறி வெளிநாட்டுத் துணிகளை ஒதுக்கினோம். ஆனால் இன்று எத்தனை பேர் கதராடை அணிகிறார்கள்? இன்று உள்நாட்டில் வெளி நாட்டு தொழில் நுட்பத்தோடு தயாரிக்கப்பட்ட செயற்கை நூலிழை ஆடகளைத்தான் அணிகிறோம். நாம் இப்போது சுதேசி ஆடையை அணிகிறோமா? இல்லை வெளிநாட்டு ஆடையை அணிகிறோமா? விடை சொல்வது கடினம். மாட்டு வண்டிகளில் இருந்து டொயோட்டோவுக்கும், ஷெவெர்லேக்கும், போர்சேவுக்கும், பிம்டபில்யுவுக்கும் மாறினோம்/ மாறிக்கொண்டிருக்கிறோம். இந்த மாற்றங்கள் தேவையானது மட்டுமில்லாமல், நல்லதும் கூட . இவ்வாறாகத்தான் மாற்றங்கள் நம்மீது திணிக்கப் படுகின்றன.
இந்தியாவின் இன்றைய நிலைக்கு வித்திட்டவர்களில், ராஜிவ் காந்திக்கு ஒரு முக்கிய பங்குண்டு. இன்னும் பல பேர்கள் இருப்பார்கள், ஆனாலும் என்னளவில் அவர் மிக முக்கியமானவர். சாம் பிட்ரோடா போன்ற வல்லுனர்களை பக்கத்தில் வைத்துககொண்டு அவர் தொலைத் தொடர்பில் தினித்த மாற்றங்களின் பயனைத்தான் நாம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
இந்தியா ஒரு இளமையான நாடு. இங்குள்ள மக்கள் தொகையின் சராசரி வயது 35-40க்குள்தான். அதனால்தான் இங்கு வளர்ச்சியின் அதிர்வுகளைக் காண முடிகிறது. இந்த இளமைத் துடிப்பான நாடை அடுத்த நிலைக்கு இட்டுச் செல்ல, துடிப்பான திட்டங்கள் தேவை, அவ்வாறான திட்டங்கள் வரும் போது, அதற்கான ஆதரவுகள் பெருக வேண்டும். இன்னும் பத்தாம் பசலித்தனமான கருத்தக்களையும், எண்ணங்களையும் கூறிக்கொண்டு அவற்றிற்கு முட்டுக் கட்டை போடுவது சரியல்ல. அத்திட்டங்களில் சற்று பாதகங்களிருப்பின் அதற்கு மாற்று, அத்திட்டங்களை கிடப்பில் போடுவது அல்ல, மாற்றுக்களை ஆராய்வதுதான்.
உதாரணமாக, நாம் இரு விடையங்களை ஆராய்வோம். முதலில் அணுசக்தி ஒப்பந்தம். நமக்கு மிக அத்தியாவசியத் தேவை எரிபொருள். அது நம் நாட்டில் அரிதானதொன்று. வெளியிலிருந்து கொண்டு வரப்படும் எரிபொருட்களின் விலையோ ( நேற்று கச்சா எண்ணையின் விலை $ 90 ஒரு பேரலுக்கு) உச்சாணிக் கொம்பிலிருக்கிறது. இந்த நிலையில், அணு சக்தியை எரி பொருள் தேவைக்கு பயன்படுத்துவதில் என்ன தவறு? இன்னும் எதற்காக பொதுவுடைமை வாதிகள் அமெரிக்கா, அமெரிக்கா என்று கூக்குரலிடவேண்டும். தொழில் நுட்பம், மூலதனம், கச்சாப் பொருட்கள் எங்கு கிடைக்கின்றனவோ அங்கேதானே போய் வாங்க வேண்டும். அரிதான பொருட்கள் அவ்வளவு சுலபமாகக் கிடைத்து விடுமா? சற்று கடினமான விலையை கொடுக்கத்தான் வேண்டியி்ருக்கும். சரி, கூக்குரலெழுப்பும் இவர்கள் அவ்வளவு சுலபத்தில் தங்கள் ஆதரவை ஆளும் கட்சிக்கு கொடுத்து விடுகிறார்களா? தங்கள் ஆதரவு மிக முக்கியம் என்பதினாலேயே, எவ்வளவு அலைக்கழிக்கிறார்கள். அதுவே ஆளும் கட்சிக்கு தேவையான எண்ணிக்கையில் மக்கள் மன்ற பிரதிநிதிகள் இருந்திருந்தால், இந்த உடன்பாடு இத்தனை நேரம் கையெழுத்தாகியிராதா? இந்த கூச்சல், முடக்கல் எல்லாம் எதற்காக? நான் இருக்கிறேன் என்று காண்பித்துக் கொள்ளவா, இல்லை என்னால் உன்னை முடக்க முடியும் என்று முட்டி முயர்த்தவா?
அடுத்து சில்லறை வியாபாரத்தில் பெரு குழுமங்கள் நுழைவதை எதிர்ப்பது. நாட்டில் தயாரிக்கும் பெரும்பாலான பொருட்கள் தனி மனிதனின் தேவைக்காகத்தான். அப்படியென்றால் அவை அனைத்தும் சில்லரை வணிகம்தான். 90 விழுக்காடு பொருட்களை குழுமங்கள்தான் தயாரித்து வருகின்றன. அவை அனைத்தையும் இனி தனி நபர்கள்தான் தயாரிக்க வேண்டும், சிறு வியாபாரிகள் தான் தயாரிக்க வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டம் நடத்தலாமா?. இனிமேல் சிமெண்ட் தயாரிப்பை குடிசைத் தொழிலாக மாற்ற வேண்டும் என்று ஒரு போராட்டம் நடத்தலாமா?
சரி, முன்னர் தனி நபர்கள் சிறு சிறு கடைகள் நடத்தி கறிகாய் வியாபாரம் செய்து வந்தார்கள். இப்போது பழமுதிர்சோலை (சென்னை போன்ற இடங்களில்) என்று கடை ஆரம்பித்து பலதரப்பட்ட காய்கறி, கனிகளை ஒரே இடத்தில், குறைவான விலைக்கு விற்பதை இவர்கள் ஏன் குறை கூறுவதில்லை? பார்க்கப்போனால், பழமுதிர்சோலைகளின் கடைப் பரப்பளவை விட, ரிலையன்ஸ் ஃப்ரெஷ் கடைகளில் கறிகாய், கனிகள் விற்பதற்காக ஒதுக்கியிருக்கும் இடத்தின் பரப்பளவு கம்மிதான். மொத்தக் கொள்முதல் செய்து, இடைத்தரகர்களை ஒழித்து, குறைவான விலையில் கொடுப்பதை எதிர்த்தும் ஒரு போராட்டம். இவ்வாறுதான் கணிணி உபயோகத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு எதிர்ப்பு தெரிவித்தார்கள், பல பேருக்கு வேலை போய் விடுமென்று. ஆனால் நடந்தது என்ன, பல நூறு மடங்கு வேலை வாய்ப்புகள் அதிகரித்ததுதான் கண்கூடாகக் கண்ட உண்மை.
நாம் இப்போது செய்து கொண்டிருப்பதென்ன? மாற்றங்கள் தேவையில்லை என்று கூறி நம்மை முந்திய நிலைக்கு இட்டுச்செல்லும் போராட்டங்களைத்தான் நடத்திக் கொண்டிருக்கிறோம்.
நமக்குத் தேவை இளமையான, அடுத்த 20, 40 ஆண்டுகளில் என்ன தேவை என்பதை எதிர்நோக்கித் திட்டமிடும் தலைவர்கள்தான். சிமெண்ட்டை ரேஷன் கடைகளில் கொடு என்று கோஷம் போடுகிற தலைவர்கள் அல்ல. ஞானி விகடனில் எழுதிய முறை வேண்டுமானால் சிலருக்கு பிடிக்காமலிருக்கலாம். ஆனால் கருத்தில் குறையிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அது அப்படியே வாஜ்பேயிற்கும், அத்வானிக்கும், தேவ கவுடா, அர்ஜுன் சிங் போன்ற பலருக்கும் (அரசுக்கட்டிலில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, தி்ண்ணைக் கட்டிலில் இருப்பவர்களுக்கும) பொருந்தும்.
